பறிபோன தங்கம்! வினேஷ் போகத் நீக்கத்திற்கு.. பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தல்
டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதி சுற்றுவரை முன்னேறி இருந்த நிலையில், அதிக எடை காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பயிற்சியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல போட்டியாளர்களின் எடையை பராமரிக்க வேண்டியது பயிற்சியாளர்களின் பொறுப்புதான் என்றும், இதை தவறிய பயிற்சியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
"வினேஷ் இங்கு தவறு செய்ததாக நான் நினைக்கவில்லை. அவர் அற்புதமாக செயல்பட்டார், இங்கு முழு தவறும் அவரது பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீதுதான் இருக்கின்றன. அவரது எடை எப்படி அதிகரித்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். அதேநேரம்
பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்பிடம் நான் பேசினேன். விதிகளை தளர்த்த வாய்ப்புள்ளதா? என்றும் கேட்டிருந்ததேன். ஆனால், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்" என்று கூறியுள்ளார்.
சர்வதேச மல்யுத்தப் போட்டிகளின் விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒரு கிராம் அதிகமாக இருந்தால் கூட வீரர்கள் போட்டியில் விளையாட அனுமதிக்கமாட்டார்கள். ஒவ்வொரு நாளின் போட்டிகளின் தொடக்கத்தின்போதும் எடை பரிசோதிக்கப்படும். இதில் தோல்வியடைந்தால் அவர்கள் இதற்கு முன்னர் வென்றது கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications