நாளை அறிமுகமாகிறது விஸ்வகர்மா திட்டம்.. சிறுதொழில் கடன் பெற தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை நாளை அமல்படுத்துகிறது. இதில் கடன் பெற என்ன தகுதிகள்... இதில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமைப்புசாரா துறையில் உள்ள கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க மத்திய அரசு நாளைய தினம் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தத் திட்டம் நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. கைவினை திறனுக்கான இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இதற்கு விஸ்வகர்மா யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா திட்டம்: விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற சில தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.. முதலில் இதில் கடனை பெறுவோர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். அடுத்து அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கைவினை கலைஞராக இருக்க வேண்டும்.. உங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். மேலும், PMEGP, PM SVANidhi, முத்ரா என கைவினை கலைஞர்களுக்கு உதவும் மற்ற எந்தவொரு திட்டத்திலும் பலன் பெற்றிருக்கக் கூடாது.
இவை தவிர இந்தத் திட்டத்தில் பலன் பெற மற்றொரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. அதாவது இதில் பலன் பெறுவோர் குடும்ப அடிப்படையிலான தொழில்கள் செய்வோராக இருக்க வேண்டும். முறைசாரா துறையில் குரு சிஷ்யா முறை பயிற்சியின் தொழில்களைத் தலைமுறை தலைமுறையாக அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எந்த தொழில் செய்வோர்: எந்த வகை தொழில்களைச் செய்யும் கைவினை கலைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும் என்பது குறித்தும் தனியாகப் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதன்படி தச்சர், படகு தயாரிக்கும் தொழில் செய்வோர், கவசம் தயாரிக்கும் தொழில் செய்வோர், கொல்லன், சுத்தியல் மற்றும் டூல் கிட் செய்வோர், பூட்டு செய்வோர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் உடைக்கும் தொழிலாளி, செருப்புத் தொழிலாளி ஆகியோர் கடன் பெறலாம்.
அதேபோல கொத்தனார், கூடை / பாய் / துடைப்பம் செய்வோர், தென்னை நார் நெசவு செய்வோர், பொம்மைகள் செய்வோர், சலூன் கடை வைத்திருப்போர், பூ மாலை கோர்ப்பவர்கள், சலவை தொழிலாளி, தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகியோர் இதில் கடனை பெறலாம்.
கடன் பெறும் முறை: இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு எந்தவொரு பிணையும் இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும். முதல் தவணையாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும். அடுத்த தவணை 5% வட்டியுடன் வழங்கப்படும்.
அருகில் உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்குச் சென்று விஸ்வகர்மா யோஜனா கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.. இதற்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தொழில் செய்ததற்கான சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் சமர்ப்பிக்கலாம். ஆனால், இந்த இரண்டும் கட்டாயம் இல்லை.
கடனை திரும்பச் செலுத்தும் முறை: உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் 3 முதல் 5 வருட காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். விஸ்வகர்மா யோஜனா என்பது அமைப்புசாரா துறையில் உள்ள கைவினை கலைஞர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் தொழிலை வளர்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications