100% ஓட்டுப்பதிவுக்கு என்ன வழி.. பட்டுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி.. சில ஐடியாக்கள்!
டெல்லி : 2020 ம் ஆண்டு கொரோனா ஆண்டு என அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. ஆனால் 2021 ம் ஆண்டை தேர்தல் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன.
சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்காக அரசியல் கட்சிகள் ஒரு புறமும், இந்திய தேர்தல் கமிஷன் ஒரு புறமும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானால் மட்டுமே அது ஜனநாயக முறைப்படியான தேர்வாக இருக்க முடியும். இந்த 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தேர்தல் கமிஷனுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இந்த இலக்கை எட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று வரை 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது எட்ட முடியாத இலக்காகவே இருந்து வருகிறது. இந்த 100 சதவீதம் ஓட்டுப்பதிவை கொண்டு வருவதற்கு வழி உள்ளதா, சாத்திய கூறுகள் என்ன என்பது பற்றி இங்கு பார்க்க உள்ளோம்.
தேர்தலுக்கு காத்திருக்கும் மாநிலங்கள் :
தமிழகம், அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளன. இதே போன்று ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் குடியரசு தலைவர் ஆட்சியும் இந்த ஆண்டு நிறைவடைய உள்ளது. இதனால் அங்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, ஆந்திராவின் திருப்பதி, கர்நாடகாவின் பெல்கம், கேரளாவின் மலப்புரம் ஆகிய 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதே போன்று குஜராத், மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட 16 மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்புள்ளது.
சவாலான 100 சதவீதம் ஓட்டுப்பதிவு :
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1951 ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை நடத்தப்பட்ட தேர்தல்களில் இதுவரை 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதே இல்லை. மேகாலயா போன்ற மாநிலங்களில் உள்ள மலைக்கிராம ஓட்டுச்சாவடிகளில் ஒரு வாக்காளர் மட்டுமே இருக்கும் இடங்களில் தான் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மற்ற பகுதிகளில் 85 சதவீதத்தில் தாண்டுவதே சாதனையாக இருந்து வருகிறது.
தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் :
100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய இந்திய தேர்தல் கமிஷன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பலவழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதன் டிஜிட்டல் முறையில் ஓட்டளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவும் முயற்சிப்பதாக சமீபத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கவும், நாட்டின் எந்த ஓட்டுச்சாடியில் இருந்தும் ஓட்டமிக்கவும் விரைவில் புதிய முறை கொண்டு வரப்படும் என்றார்.
வேறு ஏதாவது வழி இருக்கா :
நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தினால் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடையலாம் அன தொழிற்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கத்தார் தமிழ் சங்க தேர்தலில் உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டளிப்பதற்காக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டது. கொரோனா காலம் என்பதால் உறுப்பினர்கள் நேரடியாக வந்து ஓட்டளிக்க தயக்கம் காட்ட வாய்ப்புள்ளது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சோதனை முயற்சியா :
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் இது போன்ற முறையை அறிமுகம் செய்யும் சோதனை முயற்சியாக கூட கத்தார் தமிழ்ச் சங்க தேர்தலில் இந்திய அரசு இதனை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுனில் அரோராவும், டிஜிட்டல் முறையில் ஓட்டளிக்கும் வசதியை கொண்டு வருவதற்கான சோதனை முயற்சிகள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறி இருந்தார்.
எப்படி ஓட்டளிப்பது :
ஆன்டிராய்ட் மற்றும் ஐபோன்களில் பயன்படும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்து, முதலில் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண், வாக்காளர் அடையாள எண் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவண எண்களை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி ஓட்டினை செலுத்தலாம்.
இதில் முறைகேடு நடக்காதா :
மொபைல் போன் இருந்தால் இதனை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாமே என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றும். அதற்கு தொழிற்நுட்ப நிபுணர்கள் கூறும் பதில், ஒரு அடையாள எண்ணை பயன்படுத்தி ஒருவர் ஒருமுறை மட்டுமே ஓட்டளிக்க முடியும். மறுமுறை அதே மொபைல் அல்லது வேறு எந்த மொபைலில் இருந்து ஓட்டளிக்க செலுத்த முயற்சித்தால், ஏற்கனவே ஓட்டு செலுத்தப்பட்டு விட்டது என காட்டும். மேலும் குறிப்பிட்ட நபர் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, ஒட்டினை பதிவு செய்வதற்கு முன் ஓடிபி அனுப்புவது, பிறந்த தேதி போன்ற ஏதாவது ரகசிய குறியீட்டை பதிவிட்டால் மட்டுமே ஓட்டை பதிவு செய்ய முடியும்.
இந்தியாவில் இது சாத்தியமா :
தனி நபர் முறைக்கு பதிலாக 100 பேருக்கு ஒரு மொபைல் என்ற வீதத்தில் பயன்படுத்தினால் இது சாத்தியம் தான் என்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்கள் அல்லது அரசியல் கட்சியின் ஏஜன்ட்களை கொண்டு க்யூஆர் கோடு உருவாக்கி இந்த ஆப்பை பயன்படுத்தலாம். அப்படி ஓட்டளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மொபைல் போனின் முழு கட்டுப்பாடும் தேர்தல் நாளுக்கு 2 நாளுக்கு முன்பாக அரசின் தேர்தல் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு, அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் முறைகேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்கிறார்கள்.