"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
பதான் திரைப்படத்தைத் தடை செய்வேன் என்று முன்பு சொன்ன பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இப்போது அதற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முன்பு இப்படத்திற்குத் தடை கேட்டுக் கொந்தளித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான எந்தவொரு படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு வந்த எந்தவொரு திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மக்களிடையே அது வரவேற்பைப் பெறவில்லை.
அதேநேரம் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போது எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாவது வாடிக்கையாக இருந்தது. இதனால் பாலிவுட் பெரும் ஹிரோக்களுக்கும் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்தனர்.

பதான் படம்
அதிலும் குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஷாருக் கான் நடிப்பில் வெளியான கடைசி சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் கடந்த 2018க்கு பிறகு சின்ன பிரேக் ஒன்றை அவர் எடுத்திருந்தார். சுமார் 3 ஆண்டுகள் பிரேக்கிற்கு பிறகு இப்போது வெளியாகியுள்ளது பதான் திரைப்படம். தொடர் தோல்விகளுக்குப் பதில் கொடுக்கும் வகையிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் ஷாருக்கானிற்கு மிகப் பெரிய ஒரு ஹிட் தேவைப்பட்டது. இதற்காகவே அவர் சின்ன பிரேக்கிற்கு பிறகு பதான் படத்தைக் கொடுத்துள்ளார்.

கிளம்பிய சர்ச்சை
கடந்த டிசம்பர் 2022இல், பதான் புரமோஷனுக்காக அதில் இடம் பெற்றுள்ள 'பேஷரம் ரங்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. அதில் தீபிகா படுகோன் அணிந்த ஆடையின் கலர் உள்ளிட்ட விஷயங்களைக் காரணம் காட்டி சில வலதுசாரி அமைப்புகள் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கம் போலக் குரல் கொடுக்க தொடங்கினர். குறிப்பாக மத்தியப் பிரதேச பாஜக உள் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மத்தியப் பிரதேசத்தில் திரைப்படத்தைத் தடை செய்ய உள்ளதாகப் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார்.

பிகினி நிறத்திற்கு எதிர்ப்பு
தீபிகா படுகோனின் காவி நிற பிகினி உடைக்கு அவர் ஓப்பனாகவே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் தனது ட்விட்டரில், "உடைகள் மிகவும் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளது. பாடல்கள் மோசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டார். இதற்கிடையே தணிக்கை குழு, உரிய வழிகாட்டுதல்களின்படி படத்தின் பாடல்கள் மாற்றம் செய்யக் கோரியதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் படம் நேற்றைய தினம் இந்தியா முழுக்க வெளியானது. படம் வெளியாகும் முன்பு வலதுசாரி அமைப்பினர் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்னெடுத்தனர். இருப்பினும், அதையும் தாண்டி படத்திற்கு இப்போது பிளாக்பஸ்டர் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

போராட்டம்
இருப்பினும், படம் திரையிடப்பட்ட சில இடங்களில் சலசலப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் சில இடங்களில் வலதுசாரி அமைப்புகள் திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. இந்தூர் மற்றும் போபாலில் காட்சிகளை ரத்து செய்யவும் கட்டாயப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியானது. இதனிடையே முன்பு படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறிய அதே பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

தேவையில்லை
பதான் திரைப்படத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "படத்தில் அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். சென்சார் போர்டு தேவையான திருத்தங்களைச் செய்துள்ளன. சர்ச்சைக்குரிய வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இப்போது போராட்டம் தெரிவிப்பதில் எந்தப் பயனும் இல்லை" என்று நரோத்தம் மிஸ்ரா கூறினார். அமைச்சரே இப்படிக் கூறியுள்ள நிலையில், இதன் பிறகு பதான் படத்திற்கு எதிராகப் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் பிரதமர் மோடி, திரைப்படங்களுக்கு எதிராகத் தேவையற்ற கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்குமாறு பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தச் சூழலில் தான் அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். பிரதமர் மோடியின் கருத்து குறித்த கேள்விக்கும் பதிலளித்த நரோத்தம் மிஸ்ரா, "அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு முக்கியமானது. அவரது வார்த்தைகளே எங்களுக்கு உத்வேகத்தைத் தருகிறது. அவரது கருத்துகளைப் பின்பற்றியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications