பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வரை எத்தனை நாள் கழித்து தேர்வு செய்தார்கள் தெரியுமா? லிஸ்ட் போட்ட காங்.
டெல்லி: கர்நாடகாவில் முதல்வரை அறிவிக்கக் காங்கிரஸ் கட்சிக்கு 4 நாட்கள் ஆனதாக பாஜக விமர்சிக்கும் நிலையில், இதற்குக் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் என்றே கூறப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணிக்கை போது தபால் வாக்குகள் எண்ணப்படும்போது, முதலில் பாஜகவே முன்னிலையில் இருந்தது. இருப்பினும், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தவுடன் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

கர்நாடக தேர்தல்: பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. தொங்கு சட்டசபை அமையலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதை அடித்து நொறுக்கிவிட்டு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. சபாநாயகர், அமைச்சர்கள் தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற சூழலில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றியது.
அப்போது கர்நாடக முதல்வர் யார் என்ற அடுத்து கேள்வி எழுந்தது. பிரசாரம் சமயத்திலேயே காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர் என்று கேள்வி எழுந்தது. இருப்பினும், அப்போது இது குறித்துப் பேசினால் வாக்கு சிதறலாம் என்பதால் தேர்தலுக்குப் பின் தலைமை முடிவு செய்யும் என்றே இரு தரப்பும் சொல்லி வந்தது. இதற்கிடையே காங்கிரஸ் வென்ற நிலையில், அங்கே முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டது.

4 நாட்கள் ஆலோசனை: இரு தரப்பினரும் தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கே ஒரு வித குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்க முதலில் சித்தராமையாவும் அடுத்து டிகே சிவக்குமாரும் டெல்லி சென்றனர். சுமார் 4 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஒரு வழியாக இன்று சஸ்பெண்ட் உடைந்தது. சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதில் 4 நாட்களாக ஒருமித்த முடிவு ஏற்படாத நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே டிகே சிவக்குமார் சம்மதித்துள்ளார். கட்சியின் நலனுக்காகத் தியாகம் செய்ய ஒப்புக்கொண்டதாக டிகே சிவக்குமார் தெரிவித்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் பதிலடி: தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் வரை முதல்வரைத் தேர்வு செய்யக் காங்கிரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையே இந்த விமர்சனங்களுக்குக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். மாநில முதல்வர்களை அறிவிக்க பாஜக இதை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "2017இல் உத்தரப் பிரதேச முதல்வரை அறிவிக்க பாஜக 8 நாட்கள் எடுத்துக் கொண்டது.. 2021இல் அசாமின் முதல்வரைத் தேர்வு செய்ய பாஜகவுக்கு 7 நாட்கள் ஆனது.. 2022இல் உத்தரகண்ட் முதல்வரை 11 நாட்களுக்கு பிறகே பாஜக அறிவித்தது.
இப்போது 2023இல் எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்து 3 நாட்களில், கர்நாடகாவின் முதல்வர் மற்றும் துணை முதல்வரைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜகவுக்கு என்னவென்றே தெரியாத ஆலோசனை நடத்தியே நாங்கள் தேர்வு செய்துள்ளோம். சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். இருவரும் சேர்ந்து கர்நாடகாவை மாற்றி அமைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications