அனைத்து மாநிலங்களிலும் குறையும் கொரோனா பரவல்.. என்னதான் காரணம்.. ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் வைரஸ் பரவல் எப்படி உள்ளது என்பதே முக்கியம் என்றும் வரும் காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் தயாராகி இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. கடந்த வாரம் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை தாண்டியிருந்தது.
இருப்பினும், கடந்த சில தினங்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை குறைந்துள்ளதா
குறிப்பாக கொரோனா வேகமாக இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 4.01 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 3.57 லட்சமாகக் குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். முதலில் தினசரி கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளது, அல்லது தேவையான இடத்தில் உரிய அளவு பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.

குறையும் ஆக்டிவ் கேஸ்கள்
இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் வேகம் குறைந்துள்ளது. கடந்த 20 நாட்களில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை 63,998 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே மாநிலத்தில் அதிகரித்தது. முன்னதாக ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 28 வரை ஆக்டிவ் கேஸ்கள் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்தது.

எந்த மாநிலங்களில் குறைவு
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்தே வருகிறது.

தப்பித்த உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அங்குக் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது. எங்கு மகாராஷ்டிராவைப் போல உத்தரப் பிரதேசத்திலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்குமோ என்று அஞ்சப்பட்டது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் போதிய மருத்து கட்டமைப்பு இல்லாததால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. நல்லவேளையாக அப்படி நடக்கவில்லை.

தலைநகரில் உயிரிழப்புகள் அதிகம்
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும்போதும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தற்போது அங்குத் தினசரி சுமார் 400 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். தற்போது வரை டெல்லியில் 17 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு(70000 பேர்) கொரோனா உயிரிழப்புகள் அதிகம் உள்ளது டெல்லியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் காலம்
கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், வரும் நாட்களில் நிலைமை எப்படி உள்ளது என்பதே மிகவும் முக்கியம். ஏனென்றால், அமெரிக்கா ஆய்வாளர்கள் வரும் மே 2ஆவது வாரத்திலேயே இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெறும் எனத் தெரிவித்துள்ளனர். அதைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications