"மொத்தம் 56 கேள்விகள்.." சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது.. அப்படியே தொண்டர்களிடம் சொன்ன ஜெக்ரிவால்
டெல்லி: மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். இதனிடையே அது குறித்து கெஜ்ரிவால் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் மதுபான கொள்கை விவகாரம் இப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. டெல்லி அரசின் புது மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜகவினர் புகார் அளித்தனர்.
இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், புது மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அங்குத் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியா: கடந்த பிப். மாதம் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது சிபிஐ. அதன்படி இன்று காலை அவர் ஆஜரான நிலையில், அவரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நீட்டித்தது. விசாரணை முடிந்த பிறகு, இரவு அவர் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
தனியாருக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் கொள்கை வகுப்பதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், அது குறித்து கெஜ்ரிவால் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். இதுவரை மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ எந்தவொரு சம்மனையும் அனுப்பவில்லை.
56 கேள்விகள்: சிபிஐ விசாரணைக்குப் பின் வீடு திரும்பிய கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிபிஐ என்னிடம் மொத்தம் 56 கேள்விகளைக் கேட்டனர். அனைத்தும் போலியானது. வழக்கும் போலியானது. அவர்களிடம் எதுவும் இல்லை, ஒரு ஆதாரம் கூட இல்லை என்று எனக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன்.
மதுபான கொள்கை அமலுக்கு வந்த 2020ஆம் ஆண்டு முதல் இறுதி வரை என்ன நடந்தது என அனைத்தையும் சிபிஐ என்னிடம் கேட்டது.. நாளை டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து மேலும் விவாதிக்க உள்ளோம்... இந்த மதுக்கொள்கை விவகாரமே பொய்யானது.. திட்டமிட்டு எங்கள் மீது பழி சுமத்தியுள்ளனர்.

நேர்மையே முக்கியம்: எப்போதும் நேர்மையாக இருப்பதே எங்களின் சித்தாந்தம்.. நாங்கள் உயிரிழக்கவும் தயாராக உள்ளோம்.. ஆனால் நேர்மையுடன் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அவர்கள் எங்களை எங்கள் வளர்ச்சி திட்டங்களையும் இழிவுபடுத்தவே இதையெல்லாம் செய்கிறார்கள். நாங்கள் இப்போது தேசியக் கட்சியாகிவிட்டோம். இதன் காரணமாகவே எங்களைக் கண்டு அஞ்சி எங்களை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் இப்படியெல்லாம் செய்து வருகிறார்கள்" என்றார்.
கெஜ்ரிவாலை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியது. இதையடுத்து ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் இன்று மாலை அவசர கூட்டத்தையும் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சிபிஐ அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியதற்காக ராகவ் சதா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கெஜ்ரிவால் வெளியே வந்தவுடன் அவர்களும் விடுவிக்கப்பட்டனர். பாஜகவுக்கு மோடியைக் கண்டால் பயம் என்றும் அதன் காரணமாகவே இதுபோல செய்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications