"6+1.." மோடி அமைச்சரவையில் உள்ள முன்னாள் முதல்வர்கள்.. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் என்ன
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
6 பேர்: இந்த மத்திய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண் அமைச்சகமும், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரம் மற்றும் நகர்ப்புற விவகாரத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சிக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சராகத் தொடர்கிறார்.
முன்னாள் முதல்வர்கள்: அதேபோல அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவாலுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.. அவருக்குத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்குக் கனரக தொழில்கள் மற்றும் இரும்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு முன்னாள் அமைச்சர்களுக்குத் தான் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி: இது தவிரக் குஜராத்தின் முன்னாள் முதல்வரான பிரதமர் நரேந்திர மோடியும் தனது வசம் சில முக்கிய துறைகளை வைத்துக் கொண்டு இருக்கிறார். பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை, அணுசக்தித் துறை மற்றும் விண்வெளி துறை மோடி வசம் இருக்கிறது. மேலும், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளையும் பிரதமர் மோடியே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய துறைகள்: மோடி அமைச்சரவையில் முக்கியமான நான்கு துறைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அமித் ஷா, நிதித்துறை கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்கிறார்கள். அதேபோல சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை, பியூஷ் கோயலுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சராகத் தொடரும் நிலையில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை பிரகலாத் ஜோஷிக்கும், வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டு அமைச்சகம் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications