எதிர்க்கட்சி மாநிலங்கள் வைத்த டிமாண்ட்.. கடைசியில் நிர்மலா சொன்ன வார்த்தை! ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்தது இதுதான்
டெல்லி: ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு நேற்று மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் வரி குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஜிஎஸ்டி குறைப்பு விவகாரத்தில் அவ்வளவு சீக்கிரம் உடன்பாடு எட்டப்படவில்லையாம். இதில் பல விஷயங்கள் பின்னணியில் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து முடிவுகளையும் ஜிஎஸ்டி கூட்டமே எடுக்கும். மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எப்போதுமே ஒருமித்த உடன்பாடு ஏற்படும். ஆனால், நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சாதாரணமாக முடிவடையவில்லை. இதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளன. இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரவு வரை இது தொடர்பான தொடர் ஆலோசனையை நடத்தியிருக்கிறார்.

6 மாத மீட்டிங்
ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்படுவது தொடர்பாகக் கடந்த ஆறு மாதங்களாகவே பல்வேறு குழுக்களுடன் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்திருந்தார். நிதியமைச்சர் மட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதில் தனித்தனியாகக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். முக்கியமான பொருட்களின் வரி விதிப்பு குறித்து எந்தவொரு அரசியல் சர்ச்சையும் எழாமல் பார்த்துக் கொண்டார். மாநிலங்களின் வருவாய் கவலைகள் குறித்தும் அவர் உறுதியளித்தார்.
இரவு வரை நடந்த மீட்டிங்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பே இவ்வளவு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த போதிலும் கவுன்சில் கூடியபோது, ஒருமித்த கருத்து எட்டப்படுவது அவ்வளவு ஈலியாக இல்லை. வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வரி விகித குறைப்புகளைக் கடுமையாக எதிர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே மாலை 7 மணிக்கு முடிய வேண்டிய கூட்டம் 9.30 வரை நடந்தது.
பஞ்சாப்பும் மேற்கு வங்கமும் தங்கள் நிலைப்பாட்டைச் சீக்கிரமே மாற்றிக் கொண்டன. ஆனால், கேரளாவும் கர்நாடகாவும் இதை கடுமையாக எதிர்த்தது. வரி வருவாய் குறையும் என்பதால் அதற்கான இழப்பீடுகளை மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தின. சில மாநிலங்கள் இந்த விவகாரத்தில் இந்த முடிவை அடுத்த நாள் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
உறுதியாகச் சொன்ன நிர்மலா சீதாராமன்
இருப்பினும், நிர்மலா சீதாராமன் அதை ஏற்கவில்லை. அப்போது அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். தேவைப்பட்டால் இரவு முழுவதும் கூட விவாதிக்கத் தயார்.. ஆனால், மறுநாளுக்கு ஒத்திவைக்க முடியாது என அவர் சொல்லிவிட்டாராம். இந்த இழுபறி மற்ற மாநிலங்களின் பொறுமையைச் சோதித்தது. அப்போது ஒரு கட்டத்தில் சத்தீஸ்கர் நிதியமைச்சர் ஓ.பி. சௌத்ரி, "ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் ஏன் இந்த விஷயத்தை வாக்கெடுப்புக்கு விடக்கூடாது?" என்று கேட்டிருக்கிறார்.
உள்ளே வந்த மேற்கு வங்கம்
ஜிஎஸ்டி கவுன்சில் வரலாற்றில் இதற்கு முன்பு லாட்டரிக்கான ஜிஎஸ்டி தொடர்பாக ஒருமுறை மட்டுமே வாக்கெடுப்பு நடந்துள்ளது. இதனால் நிர்மலா சீதாராமன் வாக்கெடுப்பு வேண்டுமா என்று உறுப்பினர்களிடம் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அது மக்களிடையே தங்கள் மீது ஒரு கெட்ட இமேஜ்ஜை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் நினைத்துள்ளன. இறுதியில், மேற்கு வங்கம் தலையிட்டு, கேரளாவையும் கர்நாடகாவையும் சமாதானப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னரே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
நிர்மலா சீதாராமன் சொன்ன பாயிண்டு
மாநிலங்களுக்கு உறுதியளிக்கும் வகையில், யாரும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட மாட்டார்கள் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். மாநிலங்கள் இழந்தால், மத்திய அரசும் இழக்கும். ஆனால், மக்களுக்கு நல்ல செய்தியை நாம் கொடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அதன் பிறகே எதிர்க்கட்சி மாநிலங்கள் இதற்கு ஒப்புக்கொண்டன. இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பிறகே நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 என்று அழைக்கப்படும் மிக பெரிய சீர்திருத்தத்தை அறிவித்தார்.












Click it and Unblock the Notifications