என்ன சொல்றீங்க.. "அமெரிக்காவில் இட ஒதுக்கீடா.." இன அடிப்படையில் ரிசர்வேஷன்! இது உங்களுக்கு தெரியுமா
டெல்லி: அமெரிக்காவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உலகெங்கும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் காலம் காலமாக இன ரீதியான பாகுபாடு இருந்து வந்தது. கறுப்பு இனத்தவர் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். அந்த அடிமை முறை ஒழிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அங்கே பாகுபாடு தொடர்கிறது.
இதன் காரணமாகவே அங்கே இன ரீதியிலான இட ஒதுக்கீடு இருந்தது. இது தொடர்பான வழக்கில் பல்கலைக்கழக சேர்க்கையில் இனத்தை ஒரு காரணியாகக் கருத முடியாது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவில் இட ஒதுக்கீடு: இதனை அங்கே "affirmative action" என்று அழைப்பார்கள். இதை பாசிட்டிவ் பாகுபாடு (positive discrimination) என்றும் குறிப்பிடுவார்கள். அமெரிக்காவில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக 1960களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
6-3 என்ற அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் இன அடையாளத்திற்குத் தவறான முக்கியத்துவம் அளித்து, நிறத்தின் அடிப்படையில் ஒருவரது விண்ணப்பத்தை மதிப்பிடுவது சரியாக இருக்காது என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தெரிவித்தார். இது போன்ற நடைமுறை சட்ட அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் குறிப்பிட்டார்.

அமெரிக்க நீதிமன்றம்: அதேநேரம் இந்த அமர்வில் இருந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் சோனியா சோட்டோமேயர் உள்ளிட்ட லிபரல் நீதிபதிகள் இதற்கு எதிராகக் கருத்து கூறினர். புறக்கணிக்கப்பட்டோருக்கு இந்த நடைமுறை தான் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இறுதியில் 6-3 என்று அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்தானது.
இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. அங்குள்ள பல தலைவர்கள் பல வித கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பை பதிவு செய்த அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்காவில் பாகுபாடு இன்னும் தொடரும் நிலையில், இது சரியான தீர்வாக இருக்காது எனக் குறிப்பிட்டார். அதேநேரம் டிரம்ப் உள்ளிட்ட குடியரசு கட்சியினர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.
Affirmative action என்றால் என்ன: இப்படி அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்த Affirmative action என்றால் என்ன எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம். Affirmative action என்பது குறிப்பிட்ட இனக் குழுக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடாகும். உயர்கல்வியில் அதாவது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கருப்பு இன உள்ளிட்ட சிறுபான்மை மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிரேடுகள், தேர்வு மதிப்பெண்கள், இனம் என பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வாய்ப்பளித்து பன்முகத்தன்மையை வளர்ப்பதே இந்த கொள்கையின் அடிப்படை நோக்கமாகும். மாணவர் சேர்க்கையுடன், கல்வி நிறுவனங்கள் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வந்தது. இதற்கு எதிராகத் தான் இப்போது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என்ன பிரச்சினை: அமெரிக்காவில் இருக்கும் இந்த Affirmative action முறையை இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையுடன் ஒப்பிடலாம். இந்தியாவில், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எதிர்கொள்ளும் வரலாற்று அநீதிகளைக் கருத்தில் கொண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தக் கொள்கைகள் காலம் காலமாகக் காட்டப்பட்டு வந்த பாகுபாடுகளைச் சரிசெய்து, கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையைக் கொண்டு வர முயல்கின்றன. அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அனைவருக்குமான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான கருவிகளாக அமெரிக்காவில் Affirmative actionஉம், இந்தியாவில் இந்த இட ஒதுக்கீடும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications