பாஜகவை அலறவிட்ட கரப்பான் பூச்சி கட்சி.. வெறும் 5 நாட்களில் பெருகும் ஆதரவு.. என்ன மேட்டர் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் பல அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வெறும் ஐந்தே நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது ஒரு 'மீம்' அரசியல் கட்சி. இளைஞர்களைப் பற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு கருத்து சொன்னதாகத் தகவல் பரவவே, இணையவாசிகள் மற்றும் இளைஞர்களின் கோபத்தால் உருவான 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பக்ககம், தற்போது ஆளும் பாஜகவையே இன்ஸ்டாகிராமில் முந்தியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் எப்போது எது டிரெண்ட் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. திடீர் திடீர் என எதிர்பாராத நேரங்களில் ஏதேதோ விஷயங்கள் டிரெண்டாகிவிடும். அப்படித் தான் கடந்த சில நாட்களாகவே கரைப்பான் பூச்சி கட்சி என்பது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

காக்ரோச் ஜனதா கட்சி
அதாவது இன்ஸ்டாகிராமில் @cockroachjantaparty என்ற ஹேண்டிலில் இயங்கி வரும் இந்தக் கணக்கு, இன்று 10 மில்லியன் அதாவது ஒரு கோடி ஃபாலோயர்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்தது. வெறும் 56 போஸ்ட்களை மட்டுமே போட்டுள்ள இந்தக் கட்சி, ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே ஓவர்டேக் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது இந்தியாவிலேயே 2வது அதிக பலோயர்ஸ் கொண்ட அரசியல் பக்கமாக இந்த கரைப்பான் பூச்சி பக்கம் இருக்கிறது. காங்கிரஸ் 13.2 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள நிலையில், காக்ரோச் ஜனதா கட்சிக்கு 10.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அதன் பிறகே பாஜக 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் உடன் 3வது இடத்தில் வருகிறது.
பின்னணி
இந்த விசித்திரமான இயக்கம் கடந்த மே 16ம் தேதி தான் ஆரம்பித்தது. அதாவது மே 15ம் தேதி நடந்த ஒரு வழக்கின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், இளைஞர்களைக் கரப்பான்பூச்சிகளைப் போல எனக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் பரவியது. அதுவே இந்த இயக்கத்திற்குக் காரணம். அவர் இதுபோல சொன்ன பிறகே கரப்பான்பூச்சி கட்சி உதயமானது. இது ஒரு நையாண்டி இயக்கமாகத் தொடங்கப்பட்டது.
விஸ்வரூபம்
இருப்பினும், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மே 16ம் தேதி தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில் அவர், "போலி பட்டப் படிப்புகளுடன் சட்டத்துறையிலும், ஊடகத் துறையிலும் நுழைந்து ஒட்டுண்ணிகளைப் போலச் செயல்படுபவர்களைத் தான் நான் விமர்சித்தேனே தவிர, நாட்டின் இளைஞர்களை அல்ல" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
எக்ஸ் பக்கத்திலும் கூட கிட்டத்தட்ட 2 லட்சம் ஃபாலோயர்கள் உடன் இந்த கரைப்பான் பூச்சி கட்சி பக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இருப்பினும், திடீரென அதன் ட்விட்டர் பக்கம் இப்போது முடக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பெருகும் ஆதரவு
அதேநேரம் இன்ஸ்டாவில் இந்தப் பக்கம் ஆக்டிவாகவே இருக்கிறது. வெறும் மீம்ஸ் பக்கமாகத் தொடங்கிய இது, தற்போது இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி நிறுவனங்களின் மீதான ஏமாற்றங்களை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் இயக்கமாக மாறியுள்ளது. பிரபல யூடியூபர் துருவ் ரதி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்களும் கூட இந்தப் பக்கங்களை லைக் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications