பிரதமர் தலையிட்டும் பலன் கிடைக்காதது ஏன்? சிபிஐயில் என்ன நடக்கிறது?
டெல்லி: "ஒரு போர் நடக்கும்போது அதை தடுக்க முற்படுபவர் என்ன செய்வாரோ, அதையே தான் சிபிஐ விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செய்துள்ளது. ஏனெனில் சிபிஐயில் நடப்பது ஒரு உள்நாட்டுப் போர் தான்.
இந்த சண்டை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் நலன்களை பாதுகாக்க தேவை உள்ளது.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. பிரதமர் தலையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. கடைசியில் இந்த விவகாரம் மோசமான நிலைக்கு சென்று சேர்ந்தது." என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் சீனியர் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா ஆங்கில ஊடகத்தில் சிபிஐ விவகாரம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்கு எவ்வாறு பேட்டி அளித்தனரோ, அதுபோன்றுதான் சிபிஐயில் நடந்த இந்த விவகாரமும் சுதந்திர இந்தியா இதற்கு முன்பு கண்டிராதது.
[சிபிஐயை தொடர்ந்து ரிசர்வ் வங்கி.. மோடி அரசில் முக்கிய அமைப்புகளில் தொடரும் பெரும் குழப்பம்]

இயக்குநர் மீதே வழக்கு
சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குனர், அதன் இயக்குனருக்கு எதிராக மத்திய கண்காணிப்பு கமிஷனுக்கு மற்றும் அமைச்சரவை செயலாளருக்கு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி கடிதம் எழுதுகிறார். சிறப்பு இயக்குனருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த சிபிஐ இயக்குனர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. துணை எஸ்பி மட்டத்திலான சிபிஐ அதிகாரி ஒருவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கிடையே பிரதமர் சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் நேரில் அழைத்துப் பேசுகிறார். ஆனால் அப்படியும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

எமெர்ஜென்சி காலம்
இதன் பிறகுதான் மத்திய அரசு அந்த மோசமான முடிவு எடுக்கிறது. அவசர கால கட்டத்தை நினைவு கூறும் வகையில் நள்ளிரவில் 2 அதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் வெளியே அனுப்புகிறது. ஜூனியர் அதிகாரியான நாகேஸ்வர ராவை இடைக்கால சிபிஐ தலைவராக நியமிக்க அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்கிறது.

பணியிட மாற்றங்கள்
சிறப்பு இயக்குனருக்கு எதிராக விசாரணை நடத்தி வந்த அதிகாரி அந்தமானுக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். மட்டுமே நம்ப முடியாத இந்த அதிர்ச்சியான நடவடிக்கைகளை நாடு பார்த்துக்கொண்டு உள்ளது. இதன் பிறகு சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனர் மற்றும் காமன் காஸ் (common cause) என்ற என்ஜிஓ அமைப்பு என பல தரப்பும் உச்சநீதிமன்றத்தை அணுகுகின்றன.

போர் நிறுத்தம்
உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 12ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கிறது. இதன் இடைக்கால உத்தரவு என்பது ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை போன்றது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பார்க்கும்போது, போரின்போது ஒவ்வொரு தரப்புமே எதிர் தரப்பினரை பார்த்து சுட்டுக் கொள்ளாமல், அமைதி காக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை போல இருந்தது.

பிற விவகாரங்கள்
மற்ற எந்த விவகாரங்களிலும் தலையிட உச்சநீதிமன்றம் அப்போதைக்கு தயாராக இல்லை. குறிப்பாக, சிபிஐ இயக்குனரை, கட்டாய விடுப்பில் அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா என்பது குறித்த கேள்வி எழுப்பப்படவில்லை. பணியிட மாற்றம் செய்யாமலேயே, ஒரு அதிகாரியை பணியாற்ற விடாமல் செய்வது சரியாகுமா என்ற வாதத்திற்கு வரவில்லை. கண்டிப்பாக இதெல்லாம் இனிமேல் வழக்கு விசாரணையின்போது எழக்கூடிய பிரச்சினைகளாக இருக்கும். சிறப்பு இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் ஊக்கப்படுத்தவில்லை. கண்காணிப்பு கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக்கை இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய நியமனம் செய்துள்ளது.

கொள்கை முடிவுகள் கூடாது
அதேநேரம், இடைக்கால இயக்குனராக உள்ள நாகேஸ்வரராவ், சிபிஐயில் கொள்கை ரீதியான எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலமாக சிபிஐயில், அமைதி திரும்பி உள்ளது. அனைத்து மாநிலங்களிலிருந்தும், அதிகாரிகள் வழக்கம் போல வந்து செல்கிறார்கள்.

பிரதமர் தலையிட்டும்
போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வந்துள்ளது. இறுதியான முடிவு என்பது அடுத்த கட்ட விசாரணையில் தான் தெரிய வரும். ஆனால் நாட்டின் முக்கியமான விசாரணை அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல தசாப்தங்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத அளவுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வலுவான தீர்ப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு குடிமக்களுக்கு உள்ளது. ஆனால், வலுவானவர் என கூறிக்கொள்ளப்படும், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டும் கூட சிபிஐயில் அமைதி திரும்பவில்லை, என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications