"ஒரு நேஷன் ஒரே ரேட்.." இனி நாடு முழுக்க எங்கு தங்கம் வாங்கினாலும் ஒரே விலைதான்! செம மாஸ் திட்டம்
டெல்லி: நமது நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. அதில் அடுத்தகட்டமாக நாடு முழுக்க தங்கம் ஒரே விலையில் இருப்பதை உறுதி செய்யும் ஒரே நேஷன் ஒரே ரேட் என்ற திட்டத்தைக் கொண்டு வர ஜெம் மற்றும் ஜூவல்லரி கவுன்சில் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க ஒரே விலையில் தங்கம் விற்பனையாவது உறுதி செய்யப்படும்.
நமது நாட்டில் தங்கம் தான் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் சேமிப்பாக இருக்கிறது. தங்கம் விலை நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்பதாலேயே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆர்வமாக அதில் முதலீடு செய்கிறார்கள்.

தங்கம் விலை: அதேநேரம் நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும். உதாரணமாக இன்று பெங்களூரில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6750... அதேநேரம் சென்னையில் இது ரூ.6,785ஆக உள்ளது. இப்படி நாடு முழுக்க தங்கம் விலை ஒவ்வொரு விலையில் தான் விற்கப்படுகிறது. ஆனால், விரைவில் இந்த நிலை மாறப் போகிறது.
அடுத்த கட்டமாக நாடு முழுக்க உள்ள முன்னணி நகைக்கடைகள் நாடு முழுக்க தங்கத்திற்கு ஒரே விலையை நிர்ணயம் செய்யும் "ஒன் நேஷன் ஒன் ரேட்" ONOR பாலிசியை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளதாகப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் இடி நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே நேஷன் ஒரே ரேட்: இப்போது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கம் ஒவ்வொரு விலையில் விற்கப்படும் நிலையில், இந்த ஒரே நேஷன் ஒரே ரேட் அமலுக்கு வந்தால் இனி நாடு முழுக்க ஒரே விலையில் தான் தங்கம் விற்கப்படும். ஜெம் மற்றும் ஜூவல்லரி கவுன்சில் இந்த விலையை நிர்ணயம் செய்யும்.
முன்னதாக, ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சில் இந்த ஒரே நேஷன் ஒரே ரேட் திட்டம் குறித்து நாடு முழுக்க இருக்கும் பிரபல நகைக் கடை நிறுவனங்களிடம் கருத்துக் கேட்டிருந்தது. அதற்கு கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களுமே இந்த ஒரே ரேட்டில் தங்கம் விற்கப்படும் திட்டத்திற்கு ஆதரவே தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் நாடு முழுக்க இத்திட்டம் அமலுக்கு வரும் என்றே தெரிகிறது.
எப்போது அறிவிப்பு: ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சின் அடுத்த கூட்டம் செப். மாதம் நடக்கும் நிலையில், அதன் பின்னரே இத்திட்டம் அமல்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக ரித்திசித்தி புல்லியன்ஸ் லிமிடெட் (RSBL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிருத்விராஜ் கோத்தாரி கூறுகையில், "இப்படி நாடு முழுக்க ஒரே ரேட்டில் தங்கம் விற்பனை செய்யப்படுவது அனைத்து வாடிக்கையாளர்களும் சமமாக நடத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும். நீங்கள் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அதே விலைக்கு உங்களுக்குத் தங்கம் கிடைப்பதை உறுதி செய்யும்.
நாட்டின் பெரும்பாலான தங்க நகை நிறுவனங்கள், இதை ஏற்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. செப். மாதம் அடுத்த கூட்டம் நடக்கும் நிலையில், அதில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்றார்.
எப்படி பலன் தரும்: இப்படி நாடு முழுக்க ஒரே விலையில் தங்கம் விற்கப்படுவது வாடிக்கையாளர்களுக்குப் பல நன்மைகளை வழங்கும். தங்கத்திற்கு அதிக விலை தருகிறோமோ என்ற நினைப்பு இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கலாம். இது தங்க நகைக் கடைகள் திறம்படச் செயல்படவும் பெரியளவில் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
மேலும், நாடு முழுக்க ஒரே விலை என்றால் பல பகுதிகளில் தங்கம் விலை சற்று குறையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். நாடு முழுக்க ஒரே விலையில், வெளிப்படையாகத் தங்கம் விற்பனை செய்யப்படுவதை இது உறுதி செய்யும்.












Click it and Unblock the Notifications