ஆபரேஷன் சிந்தூர்: "ஹேமர்” குண்டுகளை பயன்படுத்திய இந்தியா.. ஒரே அடிதான்.. டார்கெட் மொத்தமும் காலி!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

9 இலக்குகளை குறிவைத்து தாக்குதல்
அதன்படி, பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம் உள்ள முரிட்கேயில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஸ் இ முகமது செயல்படும் பஹவல்பூர், தெஜ்ரா காலன், கோட்லியில் இரு இடங்கள், முஷாராபாத் என தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல்கோட் பகுதிகளிலும் இந்திய படை தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு செயல்படும் சியால்கோட், கோட்லி ஆகிய இடங்களிலும் இந்தியா சரவெடி தாக்குதல் நடத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் முகாம்கள் அழிப்பு
இந்தியாவின் இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் சுக்குநூறாக சிதறடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல தீவிரவாதிகள் பலியாகி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது. இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹேமர் குண்டுகள்
இந்நிலையில், பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ரஃபேல் ஜெட் விமானங்கள் 'ஸ்கால்ப் ஏவுகணைகள்' மூலம் தாக்கின. பயங்கரவாதிகளின் ஒன்பது இலக்குகளிலும் இந்திய ராணுவப் படைகளால் ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஹேமர் என்பது ஏவும் உயரத்தைப் பொறுத்து 50-70 கிலோமீட்டர் வரம்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு துல்லியமான வழிகாட்டப்பட்ட, ஸ்டாண்ட் ஆஃப் வெடிமருந்து. ஹேமர் குண்டு, சுத்தியல் போல ஒரே அடியில் குறிபார்த்து அடித்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.
ஹேமர் குண்டு என்றால் என்ன?
ஆர்மென்ட் ஏர்-சோல் மாடுலேர் (AASM) என்றும் அழைக்கப்படுபவை ஹேமர் குண்டு. இது பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏர் - டு சர்ஃபேஸ் வெடிமருந்து. இது குறைந்த உயர்த்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், ஆழமான தாக்குதல் நடவடிக்கைகள் என இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 இல் பிரான்ஸ் விமானப்படை மற்றும் கடற்படை விமானப் போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் உக்ரைன் நாட்டுக்கும் வழங்கப்பட்டது. பிரான்சில் இருந்து இந்தியா ஹேமர் குண்டுகளை வாங்கி உள்ளது.
ஹேமர் குண்டுகளின் சிறப்பு அம்சங்கள்
அடிப்படை வழிகாட்டுதலுக்கான INS/GPS வழிகாட்டுதல் கருவிகள், மேம்பட்ட துல்லியத்திற்கான இமேஜிங் இன்ஃப்ராரெட் (IIR) மற்றும் டைனமிக் இலக்குகளை கட்டுப்படுத்துவதற்கான லேசர் ஹோமிங் ஆகிய அம்சங்களைக் கொண்டது இந்த ஹேமர் குண்டுகள்.
இது அனைத்து வானிலை நிலைகளிலும் முழுமையாக செயல்படும் மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து பயன்படுத்த முடியும். இந்த ஹேமர் குண்டுகளை டசால்ட் ரஃபேல், மிராஜ் 2000D, F-16, தேஜாஸ் மற்றும் MiG-29 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் பயன்படுத்த முடியும்.
வெவ்வேறு தேவைகளுக்கு ஹேமர் வெடிமருந்துகள் பல்வேறு அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஹேமர் குண்டுகள் 125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, மற்றும் 1,000 கிலோ ஆகிய அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications