"காங்கிரஸ் முக்கிய பிரச்சினை என்ன தெரியுமா.." அது ராகுல் இல்லை.! போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்
டெல்லி: லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளக் காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை எது என்று பிரசாந்த் கிஷோர் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஆங்கிலத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்ததும் விரிவாகப் பேசியிருந்தார்.

அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காவிட்டால், ராகுல் காந்தி பின்வாங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் எனப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோர்: இது குறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக வழிநடத்திய அவரால் தேவையான முடிவைத் தர முடியவில்லை. இப்போதும் அவர் தான் கட்சியை நடத்தி வருகிறார். தேவையான முடிவைத் தர முடியவில்லை என்றால் அவர் ஒதுங்கிவிட வேண்டும். வேறு யாராவது கட்சியை வழிநடத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது ஜனநாயக விரோதமானது.
கடந்த 10 வருடங்களாக வேலை செய்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நீங்கள் விலகிவிட வேண்டும். இதனால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அடுத்த 5 ஆண்டுகள் வேறு யாரையாவது கட்சியை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். சோனியா காந்தி கூட தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி, 1991ல் பி.வி. நரசிம்மராவுக்கு வழிவிட்டார்.
ராகுல் காந்தி: உலகெங்கிலும் உள்ள நல்ல தலைவர்களின் முக்கிய பண்பு ஒன்று இருக்கிறது. அதாவது அவர்களுக்கு தங்களிடம் என்ன குறை என்பது தெரியும். அதைச் சரி செய்ய அவர்கள் தீவிர முயற்சி எடுப்பார்கள். ஆனால், ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியும் என்பது போல இருக்கிறார்.. உதவி தேவை என்பதை நீங்கள் உணரவில்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பது எல்லாம் சரி, அதைச் செய்து காட்ட ஒருவர் தேவை என்று அவர் நினைக்கிறார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் வேறு யாரையாவது தலைமை ஏற்று வேலை செய்யட்டும் என அவர் ராஜினாமா கடித்ததில் எழுதி இருந்தார். ஆனால், உண்மையில் அவர் எழுதியதற்கு முரணாகச் செயல்பட்டு வருகிறார்.
தனிப்பட்ட முறையில் புலம்பல்: பல காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் எந்த முடிவையும் தங்களால் எடுக்க முடிவதில்லை என்பதைத் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறியுள்ளனர். ஒரு தொகுதி அல்லது கூட்டணி சீட் பகிர்வு பற்றிக் கூட தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு நாட்டில் எந்தவொரு தனிநபரையும் விட அதிக ஆதரவு இருக்கிறது. அப்படி இருக்கும் போது மீண்டும் மீண்டும் தோல்விகளைச் சந்தித்தாலும் நான் தான் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தருவேன் என்று சொல்லி ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் ஒரு பக்கச் சார்புடன் இருப்பதே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என ராகுல் காந்தி சொல்வது குறித்த கேள்விக்கு, "ராகுல் காந்தி சொல்வதில் ரளவு உண்மையாக இருக்கலாம்.. ஆனால் முழு உண்மையல்ல. ஏனென்றால் கடந்த 2014இல் பாஜகவுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
உண்மையான பிரச்சினை என்ன: காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதைச் சரி செய்வது வெற்றிக்கு அவசியம். நீங்கள் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தேர்தல்களைப் பார்த்தீர்கள் என்றால் அது வாக்கு சதவிகிதம் மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற சீட்களில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. அதாவது காங்கிரஸில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது இல்லை. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்" என்றார்.












Click it and Unblock the Notifications