ஜனாதிபதி கிட்டதான் கேட்கணும்.. விளையாட்டாக சொன்ன அம்மா.. சென்னை சிறுவனுக்கு தேடி வந்த சர்ப்ரைஸ்
டெல்லி : இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?.. என்று சிறுவன் கேட்ட கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை என்று கூறிய அம்மா, ஜனாதிபதியிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு உடனே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறுவன் தனது பள்ளி நோட்டின் ஒரு பக்கத்தை கிழித்து கடிதம் எழுதியருக்கிறார். இதற்கு அங்கிருந்து பதிலும் வந்திருக்கிறது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஆஷிக். ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் நடைபெறும் பேச்சு முதலான பல்வேறு கலை போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளான்.
இந்த சிறுவனுக்கு சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது மனதில் ஒரு கேள்வி தோன்ற, அதை தனது தாயிடம் கேட்டுள்ளான். அதற்கு அவனுடைய தாயார், இந்த கேள்வியை நமது நாட்டின் குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்று விட்டார்.

சிறுவன்
அதைத்தொடர்ந்து உடனே குடியரசு தலைவருக்கு தன் மனதில் தோன்றிய அந்த கேள்வியை, தனது பள்ளி நோட்டில் தனது கையெழுத்தில் Beloved President Uncle என்று தொடங்கி எழுதி அனுப்பியுள்ளான்.

கிடைத்த பதில்
அந்த கடிதத்தில் குடியரசு தலைவருக்கு சிறுவன் கேட்ட கேள்வி... உலக நாடுகள் பலவற்றிற்கு தேசிய விளையாட்டு என்று ஒன்று உள்ளது. அதுபோல நமது இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்ற ஒன்று ஏன் இல்லை? நமது நாட்டின் முதல் குடிமகனாகிய தாங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது தான்.

சிறுவனுக்கு பதில்
இதுகுறித்த இந்த சிறுவனின் கடிதம் கிடைக்கப் பெற்ற குடியரசு தலைவர், உடனடியாக மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து சிறுவனுக்கு பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் இந்தியாவிற்கு என்று எந்த ஒரு விளையாட்டும் தேசிய விளையாட்டாக இல்லை. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாயார்
அதைத் தொடர்ந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கேள்விக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள குடியரசு தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து, பதில் அனுப்பியுள்ளது குறித்து அந்த சிறுவனின் தாயாரும், குடும்பத்தினரும், பள்ளியும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் தாயார் அனு நம்மிடம் கூறும் போது, என் குழந்தை என்னிடம் தேசிய விளையாட்டு எது என்று கேட்டான். அவனிடம் நான் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை என்று சொன்னேன். மீண்டும் என்னிடம் தேசிய பறவை உள்ளது, தேசிய விலங்கு உள்ளது, இப்படி பல்வேறு தேசிய விஷயங்கள் உள்ள போது விளையாட்டு மட்டும் ஏன் இல்லை என்று கேட்டான். அதற்கு குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னேன்.

மகிழ்ச்சி
உடனே என் மகன், அப்படி என்றால் அவருக்கு போன் போடுங்கள் என்றான். நான் உடனே அவர் முப்படைகளின் தளபதி அவருடன் போனில் பேச முடியாது, அவருக்கு கடிதம் எழுதலாம் என்று சொன்னேன். உடனே தன் சந்தேகத்தை கடிதமாக அனுப்பி வைத்துவிட்டான். அதற்கு மதிப்பு அளித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து என் மகனுக்கு பதில் அளித்துள்ளது . அந்த பதிலில் இந்தியாவிற்கு என்று எந்த ஒரு விளையாட்டும் தேசிய விளையாட்டாக இல்லை. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனை ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு காரணம்' என்று நெகிழ்ந்து போனார். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நம்மில் பலர் கேட்டு அறிந்துள்ள நிலையில், அது தவறான தகவல், வதந்தி என்பதுடன், இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்பதே இதுவரை இல்லை என்பதே உண்மை...












Click it and Unblock the Notifications