"வைச்சாச்சு ஆப்பு.." உடம்பு சரியில்லைனு இனி பொய் சொல்லி லீவ் எடுக்க முடியாது! வந்தாச்சு புது AI கருவி
டெல்லி: பொதுவாக உடம்பு சரியில்லை என்று கூறி லீவ் எடுப்பது என்பது பரவலாக அனைவருமே செய்யும் ஒரு காரியம்தான். ஆனால், அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய ஏஐ கருவி ஒன்று வந்துள்ளது.
ஒவ்வொரு காலத்திலும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு துறை மிகப் பெரியளவில் வளர்ச்சியை அடையும். கார்கள், கணினிகள், மொபைல்கள் என்று கடந்த காலங்களில் பல விஷயங்களை நாம் இதற்கு எடுத்துக் காட்டாகக் கூற முடியும்.
அதேபோல இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தொழில்நுட்ப பாய்ச்சல் என்றால் ஏஐ தொழில்நுட்பத்தைச் சொல்லலாம். ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை சாட் ஜிபிடிக்கு முன், சாட் ஜிபிடிக்கு பின் என்று கூடச் சொல்லலாம் போல.. அந்தளவுக்கு சாட் ஜிபிடி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது புது ஏஐ கருவிகள்: சாட் ஜிபிடியை தொடர்ந்து பல விதமான ஏஐ கருவிகள் நமது சந்தைக்குள் வந்து புரட்டிப் போட்டு வருகிறது. இப்படியொரு புது ஏஐ கருவி குறித்த தகவல் தான் இப்போது இணையத்தில் ஜாலி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நமக்கு வேறு எதாவது வேலை இருந்தாலும் சரி, அல்லது போர் அடித்தால் கூட சிலர் பொய்யாக உடம்பு சரியில்லை என்று கூறி கூறி விடுமுறை எடுப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், இந்த ஏஐ கருவி பொய்யாக உடல்நிலை நல்ல இல்லை என்று சொல்லி லீவ் கேட்பதையே கடினமாக்கிவிடுகிறது. வாய்ஸில் இருந்தே ஒருவருக்குச் சளி இருக்கிறதா இல்லை உடல்நிலை அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை இந்த ஏஐ கருவி கண்டறிந்துவிடுகிறது.
இனி பொய் சொல்ல முடியாது: சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஜெர்மனியின் ரெனிஷ் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். இது நமது பேச்சில் இருந்து வரும் சிக்னல்களை வைத்தே நமக்கு உடம்பு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிகிறது. இதற்காக அவர்கள் மொத்தம் 630 பேரின் குரலை ஆய்வு செய்துள்ளனர்.
அவர்களில் 111 பேருக்கு உண்மையில் சளி இருந்துள்ளது. அவர்கள் பேசும் பேட்டரனை வைத்தே அவர்களுக்குச் சளி இருக்கிறதா இல்லையா என்பதை இந்த ஏஐ கருவி துல்லியமாகக் கண்டறிந்துள்ளது. யாருக்குச் சளி இருக்கிறது... யாருக்குச் சளி இல்லை என்பதை இது பகுப்பாய்வு செய்து காட்டுகிறது. மனித பேச்சில் இருக்கும் ரித்தம்களை வைத்து இது ஒருவருக்குச் சளி இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிகிறது.

என்ன ஆய்வு: இதில் கலந்து கொண்டவர்களிடம் முதலில் 1 முதல் 40 வரை நம்பர்களைச் சொல்லச் சொல்லியுள்ளது. அதைத் தொடர்ந்து வீக் என்டில் என்ன செய்தார்கள் என்பதைக் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வேறு சில கேள்விகளைக் கேட்டுள்ளது. அப்போது அவர்களின் குரலில் இருக்கும் ரித்தம்களை வைத்தே அவர்களது உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் ஒருவருக்குச் சளி இருக்கிறதா இல்லையா என்பதை 70 சதவீத துல்லியத்துடன் கண்டறிய முடிகிறதாம். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த ஏஐ கருவியானது ஒருவருக்குச் சளி இருக்கிறதா இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டறிகிறது. இப்போது இதன் துல்லியம் 70%ஆக இருக்கும் நிலையில், வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கப் போகிறது.
எதற்கு உதவும்: அப்போது ஜலதோஷம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளை மருத்துவர்கள் இல்லாமலேயே கண்டறிய நாம் இதைப் பயன்படுத்தலாம்" என்றார். இந்த ஆய்வின் நோக்கம், ஜலதோஷம் உள்ள ஒருவரை அவர்களின் பேச்சில் இருந்து எப்படி ஈஸியாக அடையாளம் காண முடியும் என்பது தான். வரும் காலங்களில் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கவும் அவர்கள் அருகே செல்லாமலேயே அவர்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் இது உதவும்.
அதேநேரம் உடம்பு சரி இல்லை என்று சொன்னால் மட்டுமே லீவ் கிடைக்கும் அதைக்கும் இப்படி என்ட் கார்டு போட்டால் எப்படி என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications