"கட்டுகட்டாக பல நூறு கோடி.." காங்கிரஸுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் ஏன்.. வெளியான பரபர தகவல்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சுமார் 1700 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நமது நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது.
நோட்டீஸ்: முதலில் ரூ.200 கோடி ரூபாய் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இப்போது மீண்டும் சுமார் 1700 கோடி ரூபாய் கேட்டு காவருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையே வருமான வரித்துறை அனுப்பி உள்ள நோட்டீஸை காங்கிரஸ் "வரி பயங்கரவாதம்" என்று விமர்சித்துள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்டமாக இதுபோன்ற நடவடிக்கை தான் எடுக்கப்படும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்றும் போதுமான நேரம் இருந்தும் காங்கிரஸ் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் ₹ 200 கோடி அபராதம் விதித்ததையடுத்து, அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தது.. இந்தச் சூழலில் தான் மீண்டும் ₹ 1,800 கோடி கேட்டு வருமான வரித்துறை அபராதம் விதித்து இருக்கிறது.
கட்டுகட்காகப் பணம்: 2017-18 முதல் 2020-21 வரையிலான அபராதம் மற்றும் வட்டி ஆகியவை இது என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 2019 இல் நடந்த வருமான வரி சோதனைகளில், மேகா இன்ஜினியரிங் உள்ளிட்ட சில நிறுவனங்களில் காங்கிரஸின் பண ரசீதுகள் இருந்தன காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் உடன் தொடர்பு உடையவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
2013-14 முதல் ஏப்ரல் 2019 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் ரூ. 626 கோடியை ரொக்கமாக பெற்று இருக்கிறது. இந்த பண ரசீதுகளை நாங்கள் ஆவணங்கள், வாட்ஸ்அப் செய்திகள் எனப் பல முறைகளில் உறுதி செய்த பிறகே நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம், வருமான வரிச் சட்டத்தின் 13A பிரிவின் கீழ், ₹ 2,000க்கு மேல் உள்ள தொகையை நேரடியாக ரொக்கமாக ஏற்கக் கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அரசியல் கட்சிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். முழு வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டியுள்ளது" என்றார்.
காங்கிரஸ்: வருமான வரித்துறை தனக்கு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இதில் எந்தவொரு தடையையும் பிறப்பிக்க மறுத்த டெல்லி ஐகோர்ட் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தன. அந்த வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் வருமான வரித்துறையில் இருந்து ரூ.1700 கோடி கேட்டு புதிய நோட்டீஸை காங்கிரஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications