நிற்காமல் எகிறும் கொரோனா.. தென்மாநிலங்களின் நிலை மோசம்.. உயிரிழப்புகள் அதிகரிக்குமா! பரபர விளக்கம்
டெல்லி: கொரோனா பாதிப்பு நாட்டில் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன.. இதைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டுமா என்பது குறித்து டாக்டர் என்.கே. அரோரா விளக்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து பேரும் போராட்டத்திற்குப் பிறகு நாம் மீண்டுள்ள நிலையில், இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.

இன்றைய தினம் இந்தியாவில் மட்டும் 655 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் மட்டும் 424 பேருக்கும், தமிழ்நாட்டில் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் வைரஸ் பாதிப்பு 104ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா: அதேபோல கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3742ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் இப்படி திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்க ஓமிக்ரான் வேரியண்டின் ஜேஎன்.1 திரிபு தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே INSACOG அமைப்பின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கொரோனா பாதிப்பு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஏற்கனவே போட்ட கொரோனா வேக்சின்களே நம்மை இதில் இருந்து பாதுகாக்கும். 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டும் இப்போது கூடுதல் டோஸ் வேக்சினை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்குக் கூடுதல் டோஸ் வேக்சின் தேவையில்லை. அதேபோல முதியவர்களும், இணை நோய் உள்ளவர்களும் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
முதல்முறை இல்லை: ஓமிக்ரான் துணை வேரியண்ட் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல துணை வேரியண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் 400+ துணை வேரியண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த பாதிப்பு பெரிதாகப் பரவுதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.
ஜே.என்.1 கொரோனா வகையின் முக்கிய அறிகுறிகள் என்றால் அது காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் இருமல் தான். இந்த ஜேஎன் 1 கொரோனாவுக்கு தனியாக எந்தவொரு அறிகுறிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் இருக்கலாம், இவை பொதுவாக இரண்டு முதல் ஐந்து நாட்களில் குணமாகும்,.
உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனா அதிகரிப்பதில் நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். அதாவது என்ன தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட மருத்துவமனையில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதை நாம் கேரளாவில் கூட பார்க்கலாம்.
இதன் மூலம் இந்த புதிய ஜேஎன் 1 வகை கொரோனா, பொதுமக்களிடையே வேகமாகப் பரவிப் பாதிப்புகளை அதிகப்படுத்தினாலும் கூட இது தீவிர பாதிப்பை அதிகரிப்பதில்லை. இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆவதும் கூட அதிகரிப்பதில்லை" என்று அவர் தெரிவித்தார். அதேபோல கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் கூட நாம் கவலைப்படும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்ற போதிலும் பொது இடங்களுக்குச் செல்லும் போது முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications