உபி கூட ஓகே! குஜராத்துக்கு நோ! யாத்திரையில் மோடி மாநிலம் பக்கம் எட்டி பார்க்காத ராகுல்! ஏன் தெரியுமா
டெல்லி: ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரை தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையிலும் நாடு முழுக்க பாஜக தொண்டர்களை ஒரே அணியில் கொண்டு வரும் வகையிலும் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார்.
கடந்த வாரம் புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கி இந்த பேரணி மொத்தம் 150 நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடக்கிறது. காஷ்மீரில் இந்த பேரணி நிறைவடைகிறது.

பாத யாத்திரை
இந்த யாத்திரை தொடங்கியது முதலே, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல ஒரு எழுச்சி பார்க்க முடிவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் பாத யாத்திரை தொடங்கியது முதலே பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விமர்சித்தும் வருகிறது. காக்கி டரவுசர் கருகுவது போலக் காங்கிரஸ் வெளியிட்ட படத்திற்கு பாஜக ஆவேசமாகப் பதிலடி கொடுத்து இருந்தது.

கேரளா
தற்போது கேரளாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை செல்லும் நிலையில், அங்கு ஆட்சியிலுள்ள சிபிஎம் கட்சியும் காங்கிரஸைச் சாடியுள்ளது. கேரளாவில் 18 நாட்கள் பாத யாத்திரை செல்லும் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே பாத யாத்திரை செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை எல்லாம் கூற வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் மூலம் பதிலடி கொடுத்து இருந்தார்.

குற்றச்சாட்டு
2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் கொண்டு வர கேசிஆர், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் முயன்று வருகின்றனர். இந்தச் சூழலில், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் இப்படி மாறி மாறி சாடி வருவது பேசுபொருள் ஆனது. அதேபோல பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு ஏன் ராகுல் காந்தி செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

ஐந்து வழிகள்
இன்னும் இரு மாதங்களில் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமச்சால பிரதேசம் மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேசிய ஜெய்ராம் ரமேஷ், "இந்த யாத்திரைக்கு மொத்தம் ஐந்து வழிகளை ஆய்வு செய்தோம். பாதுகாப்பு, அதிக மக்களைக் கவர் செய்வது எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே இந்த இறுதி பாதையைத் தேர்வு செய்தோம்.

கேரளாவில் ஏன் அதிக நாட்கள்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் பாத யாத்திரை செல்ல இதுதான் பெஸ்ட் வழி. கேரளாவில் ஏன் 18 நாட்கள் எனச் சிலர் கேட்கிறார்கள். கேரளா தெற்கு முதல் வடக்கு வரை நீண்டு இருக்கும் ஒரு மாநிலம், கன்னியாகுமரியில் இருந்து கேரளாவைத் தாண்டி கர்நாடகாவை அடைய 370 கிலோமீட்டர்கள் ஆகும். இரு ஓய்வு நாட்கள் சேர்ந்து, அந்த தூரத்தைக் கடக்க 18 நாட்கள் ஆகிவிடும்" என்றார்.

குஜராத்
கடந்த 2019 மக்களவை தேர்தலில் கேரளா வயநாட்டில் தான் ராகுல் காந்தி போட்டியிட்டார். கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேர்தல் நடக்கும் குஜராத், இம்மாச்சல் பிரதேசங்களுக்குச் செல்லாதது குறித்துப் பேசிய அவர், "குமரியில் செப்.7இல் பாத யாத்திரை தொடங்கினோம். குஜராத் செல்ல கண்டிப்பாக 90 முதல் 95 நாட்கள் ஆகும். அதற்கு அங்குத் தேர்தலே முடிந்துவிடும்.

பாஜக கவலை
எந்த பாதையில் வந்து இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு, அங்குச் சென்று இருக்க முடியாது. இமாச்சல பிரதேசத்திற்கும் இதே நிலை தான். இதன் காரணமாகவே இரு மாநிலங்களைத் தவிர்த்து உள்ளோம். காங்கிரஸை வலுப்படுத்தி, அதன் எங்கள் சித்தாந்தத்தைப் பரப்புவது தான் இந்த யாத்திரை நோக்கம். இது பாஜகவைக் கவலையடையச் செய்துள்ளது. அதனால் தான் இப்படிப் பேசி வருகிறார்கள்.

நாங்கள் செல்கிறோம்
இந்த யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் ஐந்து நாட்கள் இருக்கும். மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்குச் செல்லாது. ஆனால் அங்கிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்காக நான், திக்விஜய சிங் உள்ளிட்ட தலைவர்கள் இந்த பாத யாத்திரை செல்லாத மாநிலங்களுக்குச் சென்று தொண்டர்களைத் திரட்டி வர உள்ளோம். இதற்காக நாளை முதல் நாங்கள் பிற மாநிலங்களுக்குச் செல்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications