பாய்ந்து வரும் ஏவுகணைகளை நொடிகளில் அழிக்கும்! கடற்படையில் புதிய மோர்முகா போர் கப்பல்! இத்தனை வசதிகளா
டெல்லி: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மிஸைல் டேஸ்டிராயர் கப்பலான மோர்முகா போர்க் கப்பல் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. வியக்க வைக்கும் பல வசதிகளைக் கொண்டுள்ள இந்த மோர்முகா போர்க் கப்பலைக் குறித்துப் பார்க்கலாம்.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே கடற்படையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்பெல்லாம் நமது கடற்படைக்குத் தேவையான போர்க் கப்பல்கள் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படும்.
ஆனால், இப்போது போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான கப்பல்கள் கட்டப்படுகிறது.

மோர்முகா போர்க்கப்பல்
இதற்கிடையே P15B என்று அழைக்கப்படும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு ஏவுகணை டேஸ்டிராயர் (missile destroyer) கப்பலான ஐஎன்எஸ் மோர்முகா போர்க் கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் பல அதிநவீன ஆயுதங்களை உள்ளடக்கியது.. நிலத்தில் இருக்கும் இலக்குகளையும் சரி, வானத்தில் பறந்து வரும் இலக்குகளையும் சரி துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த போர்க்கப்பலை இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் வடிவமைத்துள்ளது.

மேக் இன் இந்தியா
இந்தியக் கடற்படையில் உள்ள போர்க்கப்பல்களுக்கு ஒரு மாநிலத் தலைநகர், அல்லது பெரிய நகரம் அல்லது ஒரு பெரிய ராஜா அல்லது போர்வீரரின் பெயர் சூடப்படும். அதன்படி இந்தப் போர்க்கப்பலுக்குக் கோவாவில் உள்ள மோர்முகா துறைமுகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பலில் சுமார் 72% உள்நாட்டுப் பாகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் அதிகபட்சம் 58% பாகங்கள் மட்டுமே உள்நாட்டில் இருந்து பயன்படுத்தப்பட்டது.

போர்க்கப்பல்
இந்த வகையான P15 B போர்க்கப்பல்கள் மிகவும் மேம்பட்ட ஏவுகணை அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த வகையான போர்க்கப்பல்களைத் தயாரிக்கக் கடந்த 2011 முதலில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பிறகு முதல்முறையாக என்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் கட்டப்பட்டது. அது கடந்த 2021 நவ.21ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த மோர்முகா போர்க் கப்பல் கட்டப்பட்டுள்ளது.

நவீன வசதிகள்
163 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அளவுள்ள இந்தப் போர்க்கப்பலால், அணு ஆயுத தாக்குதல், உயிரியல் மற்றும் ரசாயன போர் சூழல்களைக் கூட சமாளித்துச் செயல்படும். நான்கு சக்திவாய்ந்த எரிவாயு என்ஜினை கொண்ட இந்த போர்க்கப்பலால் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 30 கடற்மைல் வேகத்தில் செல்ல முடியும். ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க ஏதுவாக நவீன ரேடார் வசதிகளையும் கொண்டு உள்ளது.

தாக்கி அழிக்கும்
டேஸ்டிராயர் வகை போர்க்கப்பல்களால் ஏவுகணைகளைக் கூட அழிக்க முடியும். இது நவீன போர்க்கப்பல் நிச்சயம் நமது கடற்படையின் பலத்தை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் எல்லையில் மட்டுமின்றி கடல் சார்ந்தும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தென் சீன கடல் தனக்குச் சொந்தம் எனச் சீனா ஒட்டுமொத்தமாக உரிமை கோருகிறது. சர்வதேச கடல் வணிகத்திற்கு இது முக்கியமான பகுதியாகும். இந்தச் சூழலில் இந்தியாவும் தனது கடற்படையை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications