நிர்வாணமாக்கி ஊர்வலம்! கூட்டு பலாத்காரம்.. உண்மையில் என்ன நடந்தது! பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண் பரபர
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அந்த பெண் சில பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்குக் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதலே மணிப்பூர் பற்றி எரியக் காரணமாக இருக்கிறது.

அங்குப் பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் போராட்டத்தையும் நடத்தினர்.
மோதல்: இருப்பினும் மைத்தேயி மக்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கான உரிமை பாதிக்கப்படும் என்று குக்கி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கே பல வாரங்களாக இணையச் சேவையும் கூட முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் கலவரம் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.. மணிப்பூரில் சுராசந்த்பூரில் ஒரு இளம் பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட புகைப்படம் மே முதல் வாரம் பரவியது. அங்கு அப்போது தான் கலவரம் ஆரம்பித்திருந்தது. குக்கி இன ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மைத்தேயி பெண்ணின் புகைப்படம் என்று கூறி இந்தப் படம் பரவியது. அங்கே கலவரம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இதுவே முக்கிய காரணமாகும்.
பலாத்காரம்: இருப்பினும், அந்தப் படம் போலியான படமாகும்.. இதில் இருக்கும் அந்தப் பெண் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷி சவுத்ரி ஆகும்.. இவர் கடந்த நவம்பர் 2022இல் பெற்றோரால் கொலை செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவரது படத்தைப் பகிர்ந்து, மணிப்பூர் நர்சிங் மாணவி என்றும் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாகப் போலியான தகவல்கள் பரவின. இது குக்கி இன பெண்கள் மீது மிகப் பெரிய வன்முறையை கட்டவிழுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே மிக மோசமான இன மோதல்கள் ஏற்பட்டது. இதில் மொத்தம் 150 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த இனக் கலவரத்தால் 40,000க்கும் மேற்பட்ட தங்கள் வாழ்விடங்களை விட்டும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் பெண்கள் எதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாகவே இருந்தது.
என்ன நடந்தது: மணிப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர், 40 வயதான குக்கி இன பெண்ணையும் ஒரு டீன் ஏஜ் பெண்ணையும் வயலில் வைத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சிலருக்கு வெறும் 15 வயது தான் ஆகியிருந்தது.. முன்பு சொன்ன அந்த போலியான படம் பரவிய மறுநாள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குற்றவாளிகள் சிலர் அப்போது, "எங்கள் பெண்களுக்கு உங்கள் ஆண்கள் என்ன செய்தார்களோ.. அதையே தான் நாங்கள் திருப்பி செய்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே தான் இந்த கொடூரத்தை அரங்கேறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்: இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு போய் செய்திதான். சுராசந்த்பூர் சம்பவத்திற்குப் பழிவாங்குவதாகக் கூறி அவர்கள் இப்படிச் செய்யலாம் செய்தார்கள். ஆனால் உண்மையில் சுராசந்த்பூரில் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை.. என்னால் அப்போது எதையும் புரிந்து கொள்ள முடியாது.
அங்கே ஆண்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறும் அவரது கைகள் இன்னுமே நடுங்குகிறது. அங்கே மிக மோசமான சூழல் நிலவுகிறது என்றும் பெண்கள் குறிவைத்து பலாத்காரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அந்த பெண் புகார் எதுவும் அளிக்கவில்லை. பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ இப்போது வெளியாகியுள்ள நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications