ஆதாரம் எங்கே? இந்த கேஸ் 2 நிமிஷம் கூட நிற்காது! மதுபான கொள்கை விவகாரம்! குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா.. இவர் துணை முதல்வராக இருந்த சமயத்தில் மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்திருந்தது.
அதாவது முன்பு டெல்லியில் அரசு மட்டுமே மது விற்பனை செய்து வந்தது. அப்போது இடையில் மதுபான விற்பனையில் தனியாருக்கு ஆம் ஆத்மி அரசு அனுமதி அளித்தது. இதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மணீஷ் சிசோடியா: இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த மார்ச் பிப். மாதம் சிபிஐ விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜரானார். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் இப்போது சிறையிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையே கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கியதாகச் சொல்லி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கையும் நேற்றைய தினம் அமலாக்கத் துறை கைது செய்தது. இதற்கிடையே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "ஆம் ஆத்மி கட்சியைக் குற்றவாளியாக்க வேண்டும் என்றே அமலாக்கத் துறை இப்படிச் செயல்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பே கேள்வி எழுப்பி இருந்தது" என வாதிட்டார்.
நீதிமன்றம் கருத்து: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்த கேள்வி சட்ட நுணுக்கம் அடிப்படையில் கேட்கப்பட்டது என்றும் யாரையும் குறிவைத்துக் கேட்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார். மேலும், அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவு விவகாரத்தில் இப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
அதற்கு சிபிஐ தரப்பில், குறிப்பிட்ட நபர்களுக்குச் சாதகமாக இந்த கொள்கை உருவாக்கப்பட்டதாகவும் இது குறித்து நடந்த வாட்ஸ்அப் மெசேஜ் உரையாடல்களை ஆதாரமாகச் சமர்ப்பித்து உள்ளதாகவும் வாதிட்டது. இருப்பினும், இந்த மெசேஜ்களை ஆதாரமாக ஏற்பதில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிக்னல் செயலி மூலம் இது குறித்து விவாதித்துள்ளதாகவும் சிக்னல் செயலியில் டிராக் செய்ய முடியாது என்பதால் இது விசாரணையைச் சிக்கலானதாக மாற்றியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் சில காட்டமான கருத்துகளை முன்வைத்தது.
சரமாரி கேள்வி: தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி, "லஞ்சம் குறித்து விஜய் நாயர், மணீஷ் சிசோடியா பேசியதை நீங்கள் பார்த்தீர்களா? இதை ஏற்க முடியுமா? அப்ரூவர் கேள்விப்பட்டேன் என்றே சொல்கிறார். இது வெறும் ஒரு அனுமானம்.. ஆனால், நமக்கு ஆதாரம் வேண்டும். இதில் ஆதாரம் எங்கே இருக்கு.. குறுக்கு விசாரணை நடக்கும் போது இது இரண்டு நிமிடம் கூட நிற்காது" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையில், லஞ்சம் வாங்கியதாகக் கைதுகள் நடந்துள்ள நிலையில், இந்த மதுபான கொள்கை விவகாரத்தில் லாபமடைவோர் யார்.. அவரை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications