2014 லோக்சபா தேர்தல்.. எக்ஸிட் போல் முடிவுகள் சொன்னது என்ன?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நிறைவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல்) வெளியாக உள்ளன. கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போதும் 7 ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தை கருத்து கணிப்பை வெளியிட்டு இருந்தன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புதான் இனி அடுத்த சில நாட்களுக்கு பேசுபொருளாக இருக்கும். மே 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஊடகங்கள் வெளியிட இருக்கும் கருத்து கணிப்புகள் கவனம் பெறும்.
2014 லோக்சபா தேர்தலின் போது சில எக்ஸிட் போல் முடிவுகள், நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறியிருந்தன. குறிப்பாக நியூஸ் 24- சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள் மிக துல்லியமாக இருந்தன.

சாணக்யா எக்ஸிட் போல்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 340 இடங்கள் கிடைக்கும் என கூறியது நியூஸ் 24- சாணக்யா எக்ஸிட் போல். இதன்படியே மொத்தம் 336 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் மேப்ஸ் ஆஃப் இண்டியாவும் பாஜக கூட்டணி 330 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்திருந்தது.

பாஜக தனித்தே 282 இடங்கள்
இண்டியா டிவி-சிவோட்டர், ஏபிபி-நீல்சன், சிஎன்என்-ஐபிஎன் - சிஎஸ்டிஎஸ் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 289, 281, 272 முதல் 280 இடங்கள் கிடைக்கும் என கணித்தன. ஆனால் பாஜக தனித்தே 282 இடங்களைக் கைப்பற்றியது. ஹெட்லைன்ஸ்ட் டுடே- சிசெரோ எக்ஸிட் போல் பாஜக அணிக்கு 261-283; டைம்ஸ்நவ்- ஓஆர்ஜி 249 என தெரிவித்தன.

காங். கணிப்பு பொய்யானது
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸுக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தன. அதுவும் டைம்ஸ் நவ்- ஓஆர் ஜி 148 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என கூறியது. காங்கிரஸ் கட்சியால் 44 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.

சிங்கிள் டிஜிட் இடதுகள்
மேலும் இடதுசாரிகளுக்கு கடும் வீழ்ச்சிதான் என்பதை அனைத்து ஊடகங்களும் தெளிவாகவே எடுத்து கூறின. ஆனால் 12 முதல் 20 இடங்கள் வரை இடதுசாரிகளுக்கு கிடைக்கும் என எக்ஸிட் போல் முடிவுகள் கூறியபோதும் சிங்கிள் டிஜிட்டில்தான் (9 இடங்கள்) அவர்களுக்கு கிடைத்த பரிதாபமும் நடந்தது.
இம்முறை எக்ஸிட் போல் முடிவுகள் சொல்லப் போவது என்ன? ஒரிஜனல் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதுதான் இனி வரும் நாட்களின் விவாதப் பொருளாக இருக்கும்.












Click it and Unblock the Notifications