"பொது செயலாளர்" எடப்பாடி! அதிருப்தி ஓபிஎஸ்! அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருக்கும்?
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அவர் இடைக்கால பொதுச் செயலாளரே இல்லை என மறுத்து கடிதம் எழுதியிருந்த ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அரசின் இந்த புதிய அங்கீகாரம் சற்று அதிர வைத்துள்ளது. இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக யாருக்கு என்ற பஞ்சாயத்து இன்னமும் ஓய்ந்தபாடில்லை. பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஆனால் தொண்டர்கள்தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது.
ஆனால் தற்போது நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அனைத்தும் இருப்பது போல் தெரிகிறது. அதாவது டெல்லியில் எடப்பாடி பழனிசாமியை காட்டிலும் ஓபிஎஸ்ஸுக்கே அதிக ஆதரவு என கூறப்பட்டு வந்தது.

ஓபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கே அதிர்ச்சி கொடுக்கும் சம்பவத்தை டெல்லி தலைமை நடத்திவிட்டது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்கள், பெரிய கட்சிகளின் தலைவர்களை அழைப்பது வழக்கம். அந்த வகையில் அதிமுகவில் யாரை அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ட்விஸ்ட்
மிகப் பெரிய ட்விஸ்ட்டாக மத்திய அரசோ எடப்பாடி பழனிசாமியை அழைத்து கடிதம் எழுதியது. அதுவும் சாதா கடிதம் இல்லை. ஓபிஎஸ் கலங்கும் அளவுக்கான கடிதமாக அது இருந்தது. அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை போட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி
இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓபிஎஸ் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என அழைக்க வேண்டாம் என எழுதியிருந்தார்.

வரவு செலவு கணக்கு
இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு தாக்கல் செய்திருந்த கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது ஓபிஎஸ் தலையில் பேரிடியாக விழுந்தது. அதிலும் ஒரு பக்கம் ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்களை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து இது போன்றொரு அறிவிப்பு வந்து எடப்பாடி பழனிசாமியை குஷிப்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் என தேர்தல் ஆணையம் எடப்பாடிக்கு அளித்த அங்கீகாரத்தையும் ஓபிஎஸ் கடந்து போனார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருமாறு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இடைக்கால பொதுச் செயலாளர்
முன்பு கூட இடைக்கால பொதுச் செயலாளர் என்றுதான் கடிதத்தில் போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது. இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இனி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனவரி 4 ஆம் தேதி அதிமுக வழக்கு
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதன் தீர்ப்பு வரும் ஜனவரி 4ஆம்தேதி வரும் என தெரிகிறது. இந்த வழக்கு விசாரணையில் நிச்சயம் தேர்தல் ஆணையம் தங்களுக்கு அளித்த அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுக்கான பிளஸ் பாயிண்ட்டாக வாதிடும். உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்னவாக இருக்கும்
எனவே அதிமுக பொதுக் குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யலாம் என தெரிகிறது. இப்படி தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ் இனி என்ன செய்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பார்த்துவிட்டு அதற்கேற்ப சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. ஓபிஎஸ்ஸின் கைகளை விட்டு அதிமுக போய்விட்டால் அவருடைய அடுத்த கட்ட நகர்வு புதிய கட்சி தொடங்குவதா இல்லை மீண்டும் மீண்டும் போராடுவதா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications