புதிய ஐடி விதிகள்..போலி தகவல்களை பரப்பிய 20 லட்சம் கணக்குகளை.. ஒரே மாதத்தில் தட்டி தூக்கிய வாட்ஸ்அப்
டெல்லி: கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரை ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஐடி சட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் அமலுக்கு வந்தது. இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் புதிய ஐடி சட்டத்திற்கு இணங்குவதாகத் தெரிவித்துவிட்டன.
இந்தப் புதிய ஐடி சட்டத்தின்படி சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் பயனாளர்களின் புகார்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் அறிக்கை
அதன்படி தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அந்த அறிக்கையில், "எங்கள் பயனர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தத் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்களில் நாங்கள் முதலீடு செய்கிறோம். மிகப் பெரியளவில் பரப்பப்படும் தீங்கு விளைவிக்கும் செய்திகளைத் தடுப்பதில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

20 லட்சம் கணக்குகள் நீக்கம்
இப்படி போலியான செய்திகளை மிக அதிகளவில் அனுப்பும் கணக்குகளை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரை மட்டும் இந்தியாவில் சுமார் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க தேவையான கருவிகளை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். ஒரு ஆபத்து நிகழும் முன்னரே அதைத் தடுக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

எப்படி நீக்கப்படுகிறது
ஆபத்தான கணக்குகளை மூன்று கட்டங்களில் நாங்கள் கண்டறிவோம். புதிதாகக் கணக்கு பதிவு செய்யப்படும் போதும், மெசேஜ் அனுப்பும் போது ஆபத்தான கணக்குகளை கண்டறிவோம். மேலும், மற்ற பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை (feedback) கொண்டும் தேவையான நடவடிக்கையை வாட்ஸ்அப் எடுக்கும். இதற்கென தனியாகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு
பேஸ்புக் நிறுவனத்தின் இணைநிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளைப் பின்பற்றி இந்த அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இருந்தாலும்கூட, இந்தப் புதிய ஐடி விதிகள் பயனாளர்களின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications