‛மரியாதையே இல்லை’.. நன்றாக பணி செய்பவருக்கு அங்கீகாரம் கிடைக்காது.. நிதின் கட்காரி பரபர பேச்சு
டெல்லி: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி திடீரென்று வேறு கட்சி தலைவரை புகழ்ந்து பேசி இருப்பதோடு, எந்த அரசியல் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவோருக்கு மரியாதையும், அங்கீகாரமும் கிடைப்பது இல்லை என பரபரப்பாக பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி. பாஜகவின் மூத்த தலைவரான இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் தான் மராத்தி செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் நடந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்கும்படி நிதின் கட்காரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நிதின் கட்காரி விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியல் பற்றி நான் எப்போது வேடிக்கையாக ஒன்றை கூறுவேன். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட ஒன்று மட்டும் கட்டாயம் நடக்கும். அதாவது நன்கு செயல்படுவோருக்கு எந்த மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்காது. அதேவேளையில் நன்றாக பணியாற்றாமல் உள்ளவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது.
இன்றைய சூழலில் சந்தர்ப்பவாத தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆளும் கட்சியுடன் அவர்கள் கூட்டணி வைக்கின்றனர். வலது சாரியோ, இடது சாரியோ தொடர்ந்து ஆளும் கட்சியுடன் பயணிக்க விரும்புகின்றனர். இது சித்தாந்தங்களில் உறுதியாக இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. இதுபோன்ற சித்தாந்த சீரழிவு என்பது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல.
ஒருவர் புகழ் அடைய பிரபலமாவதும், தங்களை விளம்பரப்படுத்தி கொள்வது அவசியம் தான். ஆனால் அவர்கள் மக்களுக்காக தொகுதியில் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது தான் அதைவிட முக்கியம். மேலும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் நடத்தை, எளிமை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் என்னை கவர்ந்த தலைவர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிறகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தான்’’ என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் சமதா கட்சியின் தலைவராக இருந்தார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications