கேரளா நிகழ்ச்சியில் "ஹமாஸ்" காலித் மஷால்.. ஹமாஸின் சர்வதேச முகம், அரசியல் முதுகெலும்பு.. யார் இவர்
டெல்லி: கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் தீவிரவாத குழு தலைவரான காலித் மஷால் கலந்து கொண்டு பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதற்கிடையே யார் இந்த காலித் மஷால்.. அவருக்கும் ஹமாஸுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 3 வாரங்களாகப் போர் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் முதலில் இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. இதில் பல நூறு இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது.. காசா பகுதி மீது இப்போது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக முழு வீச்சில் படையெடுப்பையும் ஆரம்பிக்க உள்ளது.
கேரளா நிகழ்ச்சி: இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் கடந்த அக், 7ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் தீவிரவாத குழு தலைவரான காலித் மஷால் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டுள்ளார். கேரளாவின் மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தான் காலித் மஷால் கலந்து கொண்டு பேசியுள்ளார். அங்குள்ள ஜமாத் இ இஸ்லாமி இளைஞர் பிரிவான சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் தான் காலித் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு அங்குள்ள பாஜக தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். பினராயி விஜயனின் கேரள காவல்துறை எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், சேவ் பாலஸ்தீனம் என்ற பெயரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பைப் புகழும் நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் ஹமாஸை போர் வீரர்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
யார் இவர்: ஹமாஸ் தலைவர் காலித் மஷால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த காலித் மஷால் யார்.. அவர் எதற்காக ஹமாஸில் இணைந்து சண்டையிட்டு வருகிறார்.. என்பது குறித்த கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கலீத் மஷல் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான ஹமாஸின் பொலிட்பீரோவின் நிறுவன உறுப்பினர் ஆவார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை இவர்தான் ஹமாஸ் தலைவார இருந்து அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார்.. கடந்த 2006இல் பாலஸ்தீனத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அப்போது காலித் மஷால் தலைமையில் போட்டியிட்ட ஹமாஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றது. இது அப்போது சர்வதேச அளவில் பேசுபொருளானது.
முக்கிய இடம்: மேலும், அப்போது முதல்தான் பாலஸ்தீனம் குறித்த விவாதத்தில் ஹமாஸ் முக்கிய இடத்தை பெற்றது.. பல ஆண்டுகளாக ஹமாஸின் தினசரி நடவடிக்கைகளில் காலித் மஷால் தலைமையில் தான் இருந்தது.. 1967இல் நடந்த ஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்தது. அப்போது தப்பியோடிய பல நூறு குடும்பங்களில் காலித் மாஷலின் குடும்பமும் ஒன்று எனக் கூறப்படுகிறது. அரபு நாடுகளில் வளர்ந்த இவர் ஹமாஸின் முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார்.
காலித் மஷால் பெரும்பாலும் ஜோர்டான், சிரியா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளில் இருந்தே தனது பாலஸ்தீன விடுதலைக்காக பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். இவர் குவைத் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். அப்போது 1977இல் பாலஸ்தீனிய மாணவர்களின் பொதுச் சங்கம் தேர்தலிலும் போட்டியிட்டார். மேற்குக் கரையில் பிறந்த காலித் மஷால், குவைத் மற்றும் ஜோர்டானில் வளர்ந்தார். தற்போது கத்தாரில் வசிக்கும் காலித் மஷாலின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலர் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது காசாவுக்கு வெளியே இருந்து பாலஸ்தீனத்திற்காகக் குரல் கொடுத்து வரும் முக்கிய தலைவர்களில் ஒருவராக காலித் மஷால் இருக்கிறார். ஹமாஸ் தீவிரவாத குழுவின் தலைவரான இவர், கேரளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே இப்போது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications