"இப்போ சொல்லுங்க யார் பப்பு?" டேட்டாவுடன் பேசி திணறடித்த திரிணாமுல் எம்பி! மக்களவையில் சரமாரி கேள்வி
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா, புள்ளி விவரங்களைப் பட்டியலிட்டு யார் இப்போது பப்பு என்று கேட்டார்.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி எம்பிகள் விலைவாசி உயர்வு, பொருளாதார நிலை என பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா
மத்திய அரசின் தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டிய திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா, பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக விமர்சித்தார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் (பட்ஜெட் தாக்கல் செய்யும் மாதம்) பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது. மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய் என்று குறிப்பிட்ட மஹுவா மொய்த்ரா, 8 மாதங்களாகப் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது என்றார்.

புள்ளி விவரங்கள்
தொடர்ந்து அவர் பேசுகையில், "இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ₹ 3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இதில் இருந்தே நிலைமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது அதை மேம்படுத்த நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

டேட்டா
ஒரு பொய்யை நாம் ஒரு மணிநேரம் மட்டுமே நம்பினால் கூட அவ்வளவு தான். அது அதன் வேலையைச் செய்துவிட்டது என்று அர்த்தம். அதற்கு அதி நேரம் தேவைப்படாது. பொய் பறக்கும். உண்மை நிதனமாக பின்னால் வரும். ஆளும் கட்சியும் தான் பப்பு என்ற வார்த்தையை உருவாக்கியது. நீங்கள் அதை இழிவுபடுத்தவும், திறமையின்மையைக் குறிக்கவும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இப்போது உண்மையான பப்பு யார் என்பதை நம்மிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன.

கடும் சரிவு
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகள் படி, அக்டோபரில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி நான்கு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. நாட்டில் அதிக வேலைவாய்ப்பிற்குக் காரணமாக உள்ள உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியின் தலைவரின் (ஜேபி நட்டா) சொந்த மாநிலத்திலேயே அவர்களால் வெல்ல முடியவில்லை. இப்போது யார் பப்பு?

அந்நிய செலாவணி
தொழில்துறையில் 17 முக்கிய துறைகள் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே வருடத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு $72 பில்லியன் குறைந்துள்ளது. நேற்று கேள்வி நேரத்தின் போது, வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை அமைச்சர், கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

குடியுரிமை துறப்பது
அதாவது இந்தாண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். 2014 முதல் இந்த அரசு அமைந்த பிறகு சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது.. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், பிஸ்னஸ்மேன்களை அமலாக்கத் துறை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.

பணமதிப்பு நீக்கம்
ஆளும் கட்சி பல நூறு கோடியை செலவழித்து சட்டசபை உறுப்பினர்களை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்க இயக்குநரகம் விசாரிக்கும் 95% கேஸ்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. மேலும் 2016இல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்கம் அதன் இலக்கை அடையத் தவறிவிட்டது.. இன்னும் கூட பணப் புழக்கம் அதிகமாகவே உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது" என்று அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications