Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛ரூட் கிளியர்’’.. லோக்சபா சபாநாயகர் பதவி பாஜகவுக்கு தான்! லிஸ்ட்டில் 3 பேர்.. விட்டு தந்த TDP, JDU

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான முக்கிய மீட்டிங் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடந்தது. இதில் பாஜக சார்பில் சபாநாயகரை போட்டியிடும் நபருக்கு ஆதரவு தருவதாக தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின உள்ளன. இதனால் பாஜக சார்பில் சபாநாயகராக நியமிப்பதற்கான பட்டியலில் 3 முக்கிய தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார்.

lok sabha speaker lok sabha bjp nda

மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 2 கேபினட் அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முன்னாள் முதல்வர் மஞ்சி மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் உள்ளிட்டவர்களும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அடுத்ததாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக விரும்புகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு, எம்பிக்களின் தகுதி நீக்கம் உள்ளிட்டவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்பதால் அதனை தக்கவைக்க பாஜக நினைக்கிறது. அதேவேளையில் பாஜகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் தரப்பும் இந்த பதவி மீது கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்னும் சற்றும் நேரத்தில் டெல்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் வைத்து லோக்சபா சபாநாயகராக யாரை தேர்வு செய்வது? என்பது பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பில் லாலன் சிங், எல்ஜேபி கட்சி சார்பில் சிராக் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராம்மோகன் நாயுடு, அப்னா தளம் சார்பில் அனுபிரியா படேல், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மனோகர் லால் கட்டார், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜுஜு, ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் லோக்சபா சபாநாயகராக பதவியை பாஜவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் சார்பில் பாஜக சார்பில் யாரை சபாநாயகராக நிறுத்தினாலும் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் இலக்கு என்பது பீகார் மற்றும் ஆந்திர மாநில அரசியல் தான் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதோடு, சபாநாயகராக பாஜக மேலிடம் யாரை கூறுகிறதோ அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய சூழலில் பாஜகவுடன் லோக்சபா சபாநாயகர் பதவி மீது கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் கண்வைத்த நிலையில் இரு கட்சிகளும் விட்டு கொடுத்துள்ளன. ஆனால் பாஜக அந்த பதவியை விட்டு கொடுக்கவில்லை. சபாநாயகர் பதவியை வைத்து கொண்டு லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு விட்டு கொடுக்க பாஜக திட்டமிட்ட நிலையில் தற்போது பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதையடுத்து நாளை (புதன்கிழமை) அல்லது வியாழக்கிழமை (நாளை மறுநாள்) சபாநாயகர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.அதன்பிறகு வரும் 26ம் தேதி லோக்சபா சபாநாயகருக்கான தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தாவிட்டால் ஒரே மனதாக பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் நபர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தினால் தேர்தல் நடத்தப்படும். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும் என பாஜகவிடம் கேட்க உள்ளதாகவும், ஒருவேளை அந்த பதவியை தராவிட்டால் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பாஜக துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு விட்டு கொடுக்க விரும்பவில்லை. அதேவேளையில் கூட்டணியில் உள்ள கட்சி எம்பிக்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரை நிறுத்தினாலும் சபாநாயகர் தேர்தலில் தோல்வியடையும் என்பதால் பாஜக தலைவர்கள் முதலில் கூட்டணி கட்சியினரை சரிகட்டி வெற்றி கண்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான ரேஸில் பாஜகவில் 3 முக்கிய தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

புரந்தேஸ்வரி: இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெயர் புரந்தேஸ்வரி. இவர் மறைந்த நடிகர் என்டிஆரின் மகள். ஆந்திர மாநில பாஜக தலைவரான இவர் ராஜமுந்திரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். புரந்தேஸ்வரின் சகோதரி புவனேஸ்வரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார்.

புரந்தேஸ்வரி - சந்திரபாபு நாயுடு இடையே மனஸ்தாபம் உள்ளது. இத்தகைய சூழலில் தான் சந்திரபாபு நாயுடு சபாநாயகர் பதவியை கேட்கும் நிலையில் அவரை சமாதானம் செய்யும் பாஜகவை சேர்ந்த சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரிக்கு சபாநாயகர் பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பத்ருஹரி மஹ்தாப்: இதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் இருக்கும் பெயர் பத்ருஹரி மஹ்தாப். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஒடிசாவில் பாஜக வளர்ந்து முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. அதோடு மத்தியில் ஆட்சியை பிடிக்க ஒடிசாவில் பாஜகவுக்கு கிடைத்த 10 எம்பிக்கள் மிகவும் முக்கியமானவர்கள்.

இதனால் பத்ருஹரி மஹ்தாப்புக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இவர் கடந்த 1998 முதல் கட்டாக் தொகுதி எம்பியாக உள்ளார். 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கட்டாக் தொகுதியில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். பாஜக மீண்டும் கட்டாக்கில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் கட்டாக்கில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஓம்பிர்லா: அதேபோல் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான லிஸ்ட்டில் மீண்டும் ஓம்பிர்லாவின் பெயரும் உள்ளது. இவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா லோக்சபா தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2014, 2019 தேர்தல்களை தொடர்ந்து தற்போது 3வது முறையாக அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்துள்ளதால் ஓம்பிர்லாவை சபாநாயகராக மீண்டும் நியமனம் செய்யவது பாஜகவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என மேலிடம் நம்புவதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். புரந்தேஸ்வரி பாஜகவில் செயல்பட்டாலும் கூட அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர். அதோடு சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சகோதரி. இதனால் அவரை சபாநாயகராக்கவும் பாஜகவில் சிறு தயக்கம் உள்ளது. அதேபோல் ஒடிசாவின் பத்ருஹரி மஹ்தாப் பிஜு ஜனதாதளம் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். லோக்சபா தேர்தலுக்கு முன்பு தான் அவர் பாஜகவில் இணைந்தார். இதனால் அவர் மீதும் சின்ன சந்தேகம் பாஜகவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ஓம் பிர்லாவின் பெயரும் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+