கைகொடுத்த படியே வந்த ராகுல்.. கார்த்தி சிதம்பரத்தை பார்த்ததும்.. சட்டென முகத்தை திருப்பி! என்னாச்சு?
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் கையை குலுக்காமல் ராகுல் காந்தி கடந்து சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடும் போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா முழுக்க அஹிம்சா போராட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது, அதோடு தமிழ்நாட்டிலும் தீவிரமாக நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. டெல்லியில் காந்தி நினைவிடம் இருக்கும் ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கே போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

கார்த்தி சிதம்பரம்
இந்த விவகாரங்கள் எதிலும் கார்த்தி சிதம்பரம் பெரிதாக தலையிட்டுக்கொள்ளவில்லை என்ற புகார் ஒரு பக்கம் உள்ளது. அதாவது கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால் அவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக போஸ்ட் செய்வது இல்லை. ராகுல் காந்தி விவகாரத்தில் பெரிதாக கருத்து சொல்வது இல்லை. ராகுல் காந்திக்காக நடைபெற்ற போராட்டத்தில் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

கோபம்
இதெல்லாம் போக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் உச்சகட்ட கோபத்தில் ராகுல் காந்திக்காக களமாடிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென கார்த்தி சிதம்பரம் அதிகாலையில் wordly கேமை விளையாடி அதை பற்றி ட்விட்டரில் போஸ்ட் செய்ததும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதேபோல் காங்கிரசில் தீவிர பிரச்சனைகள் இருக்கும் போது கார்த்தி சிதம்பரம் பல்வேறு சீரியல்கள் பற்றி போஸ்ட் செய்தது பெரிய சர்ச்சையானது. இதற்கு விளக்கம் அளித்த கார்த்தி சிதம்பரம்.. நான் wordly விளையாடியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

பெரிய விவகாரம்
இது பெரிய விவகாரம் ஆகும் என்று யார் நினைத்து இருப்பார். நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. நீங்களும் விளையாடி பாருங்கள். அது பெரிய அளவில் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறி இருந்தார். அவரின் இந்த போஸ்டை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் கூட கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் வருகையின் போது அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்து இருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி ராகுல் காந்தி உள்ளே சென்றார். கடைசியில் கார்த்தி சிதம்பரமும் நின்றார். ஆனால் அவரிடம் ராகுல் காந்தி கைகொடுக்கவில்லை. அவர் கை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி கை கொடுக்காமல் நகர்ந்து சென்றார். கார்த்தி சிதம்பரம் அப்படியே உள்ளே செல்லாமல் கீழே இறங்கி வந்தார்,.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தியை கண்டுகொள்ளாமல் அப்படியே ஒதுங்கி ராகுல் காந்தி சென்றார். அவரின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி தவிர்த்தார். ஏன் அவரை அருகில் வந்தும் கூட முகம் கொடுத்து பார்க்காமல் ஒதுங்கி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அல்லது வேறு எதுவும் மோதல் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications