செங்கோல் விவகாரம்.. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது- அமித் ஷா ஆவேசம்
டெல்லி: செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்திய சம்பிராதாயங்கள் மீது நம்பிக்கை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. வரும் 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் கலை பொக்கிஷம் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தயாரான வெள்ளி செங்கோல் நிறுவப்பட உள்ளது. மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே இந்த செங்கோல் நிறுவப்பட உள்ளது.
நாடாளுமன்ற கட்டிடம் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், செங்கோல் விவகாரம் புதிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதாவது, செங்கோல் விவகாரத்தில் கூறப்படும் கதைகள் பொய்யானது என்று காங்கிரஸ் கூறியிருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், " ஆதினங்களால் செங்கோல் சுதந்திரம் பெற்ற சமயத்தில் முதல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்டது உண்மைதான்.
ஆனால் அது மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்டு அவரிடம் இருந்து நேருவிடம் கொடுக்கப்பட்டதா? அதிகாரம் மாறுவதற்கான அடையாளமாக செங்கோல் கொடுக்கப்பட்டதா? என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தை வைத்துக் கொண்டு பாஜக வரலாற்று பிழை செய்கிறது என்று என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்திய சம்பிராதாயங்கள் மீது நம்பிக்கை கிடையாது. எனவே தான் செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டதா? என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற சந்தேகங்களை காங்கிரஸ் கட்சி கிளப்புகிறது.
இதுபோன்ற சந்தேகங்களை கிளப்புவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆதீனத்தின் வரலாற்றை போலி என தெரிவிப்பது காங்கிரசின் நடத்தையை காட்டுகிறது. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது" என்றும் அமித்ஷா தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications