"வலி நிவாரணிகள் வேண்டவே வேண்டாம்!" இவ்வளவு பிரச்சினை இருக்கா! கையில் எடுக்கும் முன்பு 2 முறை யோசிங்க
டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் நேற்று குறிப்பிட்ட ஒரு மருந்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தது.. எதற்காக இந்த எச்சரிக்கை, வலி நிவாரணிகள் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக எந்தவொரு மருந்தாக இருந்தாலும் அதை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், நமது நாட்டில் அப்படி இல்லை. பல மருந்துகள் இன்னுமே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கிடைக்கவே செய்கிறது.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரணிகளைக் கூட பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள்.
எச்சரிக்கை: நேற்று டிசம்பர் 7ஆம் தேதி இந்திய மருந்தியல் ஆணையம் ( Indian Pharmacopoeia Commission) மெஃப்டல் (Meftal) என்ற வலி நிவாரணி மருந்திற்குக் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா உடலில் எதிர்வினையைத் தூண்டி அலர்ஜியை ஏற்படுத்துவதாக அதில் கூறப்பட்டிருந்தது. மெஃப்டல் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதன் பிறகு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
டிரெஸ்: சில மருந்துகள் ஏற்படுத்தும் DRESS (Drug Reaction with Eosinophilia and Systemic Symptoms) பாதிப்பு உடலில் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இவை தோல் வெடிப்பு, காய்ச்சல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகளை மருந்தை உட்கொண்ட இரண்டு முதல் எட்டு வாரங்களுக்குப் பிறகு ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. மெஃப்டல் பொதுவாக முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கவனம்: எனவே, இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், மற்றும் இதைப் பரிந்துரைக்கும் டாக்டர்கள் இந்த அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய அறிகுறிகள் யாருக்காவது ஏற்பட்டால் உடனடியாக இந்திய மருந்தக விழிப்புணர்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பு மையத்திற்கு உடனடியாக அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டிரெஸ் என்ற இந்த பாதிப்பு மட்டுமின்றி மெஃப்டல் மருந்து எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலி, அஜீரணம், வாயில் வறட்சி, மங்கலான பார்வை, அதிகரிக்கும் ரத்த அழுத்தம், வீக்கம், தோல் வெடிப்பு, வயிற்றுப் புண்கள், குடல் பிரச்சினைகள் உள்ளிட்ட பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சிக்கல்கள்: மேலும், இதைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பெண்களுக்குக் கருவுறுதல், சிறுநீரக பிரச்சினைகள், இதய பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாம். இந்த பக்க விளைவுகள் அரிதானவை என்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதனால் மெஃப்டல் மருந்தை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "இந்த ஒரு வலி நிவாரணி என்று இல்லை பொதுவாக அதிகளவில் வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தம், வயிற்றுப் புண்களை அதிகரிக்கும். மேலும், சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டத்தையும் குறைக்கின்றன, இதனால் அதிகளவில் வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்வது கிட்னையை பாதிக்கும். மேலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கூட ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications