5,000 பேருக்கு தூக்கு தண்டனை-700 பேரை பலி கொண்ட ஹிஜாப் புரட்சி..'ஈரான் ரைசி' மரணத்தை கொண்டாடுவது ஏன்?
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உள்ளிட்ட 8 பேர் மரணம் அடைந்தனர். ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் ஈரானில் ஒரு பிரிவினர் ரைசியின் மரணத்தைக் கொண்டாடித் தீர்த்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
ஈரான் அதிபராக 2021-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இப்ராஹிம் ரைசியின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளும் ஒருநாள் துக்கம் அறிவித்திருக்கின்றன.

மரணத்தை கொண்டாடுகின்றனர்: ஈரான் அதிபர் ரைசியின் மரணத்தை அந்நாட்டு மக்களிலேயே ஒரு பிரிவினர் கொண்டாடி மகிழ்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள் பலரும் ரைசியின் மரணம் சரியான தண்டனைதான் என்கின்றனர். அப்படி என்னதான் ரைசி செய்துவிட்டார் என்கிறீர்களா?
யார் இந்த ரைசி: டெஹ்ரான் அருகே உள்ள கராஜ் நகரில் 20 வயதில் வழக்கறிஞர் ஜெனரலானவர் ரைசி. 1989-1994 ஆண்டு காலத்தில் டெஹ்ரான் நகரின் வழக்கறிஞர் ஜெனரலானார். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஈரான் நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார் ரைசி. நீதித்துறையில் ரைசி பணியாற்றிய காலங்களில் வழங்கிய உத்தரவுகளும் தீர்ப்புகளும்தான் இப்போது ரைசியின் மரணத்தை கொண்டாடித் தீர்க்கவும் காரணங்களாகிவிட்டன.
5,000 பேருக்கு தூக்கு தண்டனை: ஈராக்குக்கு எதிராக ஈரான் யுத்த காலத்தில் ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் ஆயுதங்களை வழங்கி ஈரானிலேயே ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார். இதனால் ஈராக், ஆயுத குழு ஆகிய இருமுனை தாக்குதல்களை ஈரான் ராணுவம் எதிர்கொள்ள நேரிட்டது. ஈரான் - ஈராக் யுத்தம் முடிந்த போது ஈராக் ஆதரவு ஆயுதக் குழுவைச் சேர்ந்த 2,000 பேர் முதல் 5,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் கதி குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் எந்த பதிலும் இல்லை. ஏனெனில் 5,000 பேருக்கும் ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றி படுகொலை செய்துவிட்டது. இந்த பேரவலப் படுகொலைக்கு உத்தரவிட்டவரே நீதித்துறையில் முக்கிய பதவியில் இருந்த ரைசிதான் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
700 பேரை பலி கொண்ட ஹிஜாப் கிளர்ச்சி: அத்துடன் ஈரானில் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணியாத பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிபர் பதவியில் இருந்து ரைசி ஆணை பிறப்பித்தார். இதற்கு எதிராக கலகம் வெடித்தது.. ஹிஜாப் புரட்சி என்கிற அளவுக்கு பெரும் போராட்டங்கள் நடந்தன. இப்போராட்டங்களை ஈரான் அரசு, ராணுவத்தை ஏவி ஒடுக்கியது. இதில் 600க்கும் அதிகமான பொதுமக்கள், 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய ரைசியின் அதிதீவிர நடவடிக்கைகள்தான் இப்போது அவரது மரணத்தை எதிரிகள் கொண்டாடித் தீர்க்க காரணமாகிவிட்டன என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ரைசியின் மரணத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இருக்கிறதா? சவூதி இருக்கிறதா? அமெரிக்கா இருக்கிறதா? என்கிற கேள்விகளுக்கு அப்பால் ரைசி ஒரு மனிதாபிமானமிக்கவரா? என்கிற கேள்வி முக்கியம் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications