கழற்றிவிடப்படும் அமெரிக்கா, ரஷ்யா! 5ம் தலைமுறை விமானங்கள் விஷயத்தில் இந்தியாவில் நிலைப்பாடு இதுதான்
டெல்லி: இந்தியாவிடம் 5ம் தலைமுறை விமானங்கள் இல்லை. இந்த விமானங்களை விற்க அமெரிக்காவும், ரஷ்யாவும் தீவிரமாக முயன்றன. இருப்பினும், இந்தியா இதை வாங்க மறுத்துவிட்டது. இதற்கான காரணங்களை இந்த செய்தி விவரிக்கிறது.
அமெரிக்கா எஃப்-35ஏ எனும் 5ம் தலைமுறை விமானத்தை தயாரித்து வைத்திருக்கிறது. 5ம் தலைமுறை விமானங்களின் சிறப்பம்சமே ரேடாரிலிருந்து மறைந்துக்கொள்வதுதான். இந்த விமானத்திலும் இந்த வசதி இருக்கிறது. 'லோ அப்சர்வபிள்' என்று இந்த சிறப்பம்சம் குறிப்பிடப்படுகிறது.

ஆக்டிவ் எலெக்ட்ரானிக்கலி ஸ்கேன்ட் அரே (AESA) ரடார், டிஸ்ட்ரிபியூட்டட் அப்பர்ச்சர் சிஸ்டம் (DAS), எலெக்ட்ரோ ஆப்டிகல் டார்கெட்டிங் சிஸ்டம் (EOTS) மற்றும் ஹெல்மெட் மவுண்டட் டிஸ்ப்ளே சிஸ்டம் (HMDS) என இந்த விமானம் சிறப்பான சென்சார் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இந்த சென்சார்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, விமானிக்கு போர்க்களத்தின் ஒரு தெளிவான, முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த காட்சியை வழங்குகிறது.
இதில் AESA எனும் சென்சார், எதிரிகளின் நிலத்தை துல்லியமாக அளவெடுத்து அதை வரைபடமாக மாற்றும். அதேபோல ஒரே நேரத்தில் பல இலக்குகளை துல்லியமாக ஃபாலோ செய்யும். மேலும், எதிரி ரேடார்களை தவறாக வழிநடத்தி, அதற்கு தவறான தகவல்களை கொடுத்து குழப்பும்.
அடுத்து உள்ள DAS அமைப்பு அகச்சிவப்பு கேமராக்களை கொண்டு விமானத்தை 360 கோணத்தில் நோட்டமிடுகிறது. விமானத்தை நோக்கி ஏதேனும் ஏவுகணைகள் வருகிறதா? என்பதை இது கண்டுபிடித்து தகவல்களை கொடுக்கும். இப்படி ஒவ்வொரு சென்சாரும் ஒவ்வொரு வேலையை கச்சிதமாக செய்து, எஃப்-35ஏ விமானத்தை உலகின் மிகவும் வலிமையான விமானமாக மாற்றுகிறது."
இதையெல்லாம் பார்க்கும்போது எல்லாம் ஒகே என்று சொல்லத்தோன்றும். ஆனால் இந்தியாவுக்கு இது ஓகேவான விமானம் கிடையாது. ஏனெனில், அமெரிக்கா இந்த விமானங்களை சில நிபந்தனைகளுடன் விற்கிறது. குறிப்பாக இந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா நம்மிடம் பகிர்ந்துக்கொள்ள தயங்குகிறது. இந்தியா மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானங்களை தயாரிக்க நினைக்கிறது. ஆனால் அதற்கான சரியான விமானம் எஃப்-35ஏ கிடையாது.
அப்படியே மறுபுறம் ரஷ்யாவின் எஸ்யு-57 விமானத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் இந்த விமானம் தயாரிக்கும் திட்டத்தில் இந்தியா பார்ட்னராக இருந்தது. ஆனால், போகிற போக்கை பார்த்தால் விமானம் அதிக செலவை இழுத்துவிடும் போல தெரிந்தது. எனவே, இப்போதைக்கு நாங்கள் பார்ட்னராக இல்லை, கழன்றுக்கொள்கிறோம். நீங்கள் விமானம் தயாரித்து முடித்த பின்னர் சொல்லியனுப்புங்கள், வேண்டும் எனில் வந்து வாங்கிக்கொள்கிறோம் என இந்தியா இந்த திட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டது.
இப்போது ரஷ்யாவின் எஸ்யு-57 விமானத்தின் சிறப்பம்சங்கள், தனித்திறன் உள்ளிட்டவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்தியா இந்த விமானங்களை வாங்காமல் இருக்கிறது.
மறுபுறம், இந்தியா சொந்தமாக விமானங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் நோக்கம், அமெரிக்கா அளவுக்கு சிறந்த விமானங்களை உருவாக்குவது கிடையாது. செலவுக்கு ஏற்றார் போல தரமான விமானங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். அதாவது குறைந்த செலவில் விமானம் உருவாக்கப்படுகிறது எனில், அதற்கான வொர்த் இருக்க வேண்டும். செலவு அதிகம் செய்யப்படுகிறது எனில், அதற்கான சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும்.
சொந்த நாட்டு விமானம் எனில் நம்முடைய நாட்டின் கால சூழலுக்கு ஏற்ப விமானத்தை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். விமானத்தின் சில பாகங்களை கழற்றி மாற்றிக்கொள்ள முடியும். அமெரிக்க விமானங்களில் அது முடியாது. அதேபோல ரஷ்யா, தனது விமானங்களை இன்னும் நிரூபிக்கவில்லை. இந்த பின்னணியில்தான் இந்தியா சொந்தமாக 5ம் தலைமுறை போர் விமானங்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications