இந்தியாவை நேபாளம் உரசுவது ஏன்.. சீனா மட்டும் காரணமில்லை.. குட்டி நாட்டுக்கு கொடுக்கு முளைத்த பின்னணி
டெல்லி: இந்திய நிலப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் நாட்டு வரை படத்துடன் இணைத்து, நேபாளம் நாட்டு அரசு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்தியாவின் அண்டையிலுள்ள, குட்டி நாடு நேபாளத்துக்கு திடீரென கொடுக்கு முளைத்தது எப்படி? எதற்காக அந்த நாட்டு பிரதமர் ஷர்மா ஒளி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எழக்கூடிய கேள்வி.
நேபாளம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின், அரசு நடைபெற்று வருகிறது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டு வரைபடத்திற்கு கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டில் கீழவை ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலவையில் இன்று ஒப்புதல் பெறும் வாய்ப்பு உள்ளது.
பாக். & சீனாவின் நிலம் எங்களுக்கு வேண்டாம்.. அமைதிதான் வேண்டும்.. மத்திய அமைச்சர் கட்கரி பேச்சு!
பல ஆண்டு நட்பு
இந்தியாவுக்கும் நேபாளம் நாட்டிற்கும், கலாச்சாரம், அரசியல், வணிகம் உள்ளிட்டவற்றில் 70 ஆண்டுகளுக்கும் மேலான இறுக்கமான நட்பு இருக்கிறது. அதை மறந்துவிட்டு இவ்வாறு ஒரு வரைபடத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதன் மூலம், இந்தியாவுடன் இனியும் நட்பை பராமரிக்கத் தேவையில்லை என்ற ஒரு சிக்னல் அங்கிருந்து உலக நாடுகளுக்கு கொடுக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த நேபாளம்
2008 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நேபாளம் நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றிய ராகேஷ் சூட், இதுபற்றி கூறுகையில், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளும் பரஸ்பரம் நட்பு மோசமான நிலைக்கு வந்து சேர்வதற்கு அனுமதித்துவிட்டன. இந்தியா இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்து இருக்கக்கூடாது. கடந்த நவம்பர் மாதம் முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்குமாறு நேபாளம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தியா, இதற்கான நேரத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் நாம் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். இப்போது நேபாளம் இன்னும் கொஞ்சம் ஆழமாக குழி தோண்டி உள்ளே சென்று விட்டது. அதிலிருந்து அந்த நாடு வெளியே வருவதற்கு கஷ்டம்.
பல நாடுகளுடன் பிரச்சினை
சீன நாட்டுடன் நமக்கு எல்லைத் தகராறு உள்ளது. இரு நாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் பாகிஸ்தானுடனும் எல்லை பிரச்சினை இருக்கிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் எதிரெதிரே நின்று யுத்தம் செய்கின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது. இது போன்ற நிலையில் நேபாளம் போன்ற ஒரு நாட்டிடம் எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்தி கொள்வது சரியல்ல.
மோதல் ஏற்பட்டிருக்க கூடாது
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும், அதற்கு பிறகு, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, நேபாளத்துடன், இந்தியாவுக்கு திறந்த வெளி உறவு இருக்கிறது. நமது எல்லைகள் எப்போதும் திறந்து உள்ளன. இருநாட்டு மக்களும் தடையின்றி சென்று வந்தனர். இப்படியான ஒரு நாட்டுடன் நாம் மோதல் போக்கு உருவாகி இருக்க கூடாது. இவர் அவர் தெரிவித்தார்.
சீனா உதவி
நேபாள நாட்டில் நடவடிக்கைக்கு பின்னால் சீனா இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சூட், கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் தலையீடு என்பது நேபாளத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் எல்லை விஷயத்தில் நேபாளம், சீனா கூறுவதை கேட்டு நடந்துகொண்டு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. 2015 ஆம் ஆண்டு நேபாளம் மீது பொருளாதார தடை விதித்த பிறகு, சீனா, நேபாளத்திற்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. புதிய சாலை அமைக்கும் திட்டங்களுக்கு உதவி வருகிறது. சீனாவை, நேபாளத்திலிருந்து இணைக்கக்கூடிய சாலைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் பிற பொருட்கள் சீனாவில் இருந்து நேபாளத்துக்கு எளிதாக சென்று சேர்வதற்கு இது வழிவகுக்கும்.
ரயில்வே பாதைகள்
மேலும் நேபாள தலைநகர் காத்மாண்டு நகரில் இருந்து திபெத் பகுதியில் உள்ள ஷிகட்சே என்ற பகுதிக்கு ரயில்வே இணைப்பு ஏற்படுத்துவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள லாசா ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். சிறிய அண்டை நாடுகளுடன் உறவை பராமரிப்பதில் இந்தியா அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கொண்டு வந்தது. அதற்கு நேபாளம் விதிவிலக்கல்ல என்று தெரிவித்தார்.
நேபாளம் உள்நாட்டு அரசியல்
2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை தூதராகப் பணியாற்றிய ரஞ்சித் ராயே, கூறுகையில், நேபாளத்தில் நிலவக்கூடிய உள்நாட்டு அரசியல் காரணமாகத்தான் அந்த நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி, இது போன்ற ஒரு புதிய வரைபடத்திற்கு, ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியா அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தேர்தலில் அவருக்கு வெற்றியை ஈட்டித் தரும் என்று நம்புகிறார்.
உள்நாட்டில் போராட்டம்
நேபாள அரசு பொருளாதார விவகாரங்களில் தோல்வியடைந்து உள்நாட்டில் நிறைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார் ஷர்மா. கம்யூனிஸ்ட் கட்சியும் அவருக்கு பதில் வேறு தலைமையை நியமிக்க, யோசித்து வருகிறது. எனவே இந்தியாவை எதிரியாக உருவாக்க முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரச்சினை அதிகம்
புதிய வரைபடத்திற்கு, அனுமதி அளித்திருப்பதன் மூலமாக, பிரச்சினை மேலும் தீவிரமடையுமே தவிர சரியாக போவது கிடையாது. கடந்த நவம்பர் மாதம் முதல் பேச்சுவார்த்தைக்கு நேபாளம் அழைத்து வருவது உண்மைதான். ஆனால் ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனதுதான் உண்மை. இவ்வாறு அவர் மேலும், தெரிவித்தார்.