‛‛ராமநாதபுரம் வேண்டாம்’’.. மீண்டும் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுவது ஏன்? 3 முக்கிய காரணம்
டெல்லி: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று வெளியான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 முறை வென்ற அதே வாரணாசி தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் ராமநாதபுரத்தை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடி வாராணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் மோடி: இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு கூட பாஜக மேலிடம் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மாறாக பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் களமிறங்க உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது நடக்கவில்லை. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:
முதல் காரணம்: நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2014 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் முதல் முறையாக 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒன்று வாரணாசி. மற்றொன்று சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா. இதில் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனாலும் அவர் வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாரணாசி எம்பியாக பிரதமரானார்.
இந்த தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இதில் பிரதமர் மோடி 5,81,022 ஓட்டுகள் பெற்று 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை (பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 9 ஆயிரத்து 238) வீழ்த்தினார்.
அதன்பிறகு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஜய் ராய் 2வது முறையாக பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட்டார். அப்போது பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 ஓட்டுகள் பெற்று 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 1 லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளுடன் 2ம் இடம் பிடித்தார். வாரணாசியில் தற்போது பிரதமர் மோடிக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் எளிதாக ஜெயிக்க முடியும். இது முதல் காரணம்.
2வது காரணம்: இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் மாநிலம் உத்தர பிரதேசமாகும். இங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் மத்தியில் ஆட்சியை எளிதாக பிடிக்க முடியும். தற்போது பாஜகவுக்கு 62 எம்பிக்கள் உத்தர பிரதேசத்தில் உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது, பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடுவது என்பது இன்னும் பாஜகவுக்கு செல்வாக்கை உயர்த்தும். இதனால் பிரதமர் மோடி வாரணாசியை விட்டு வெளியேற விரும்பவில்லை என கூறப்படுகிறது.
3வது காரணம்: பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிட்டால் எளிதாக ஜெயிப்பார். கடந்த 2014யை ஒப்பிடும்போது 2019ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வென்றார். தற்போதும் வாரணாசியில் பிரதமர் மோடிக்கான செல்வாக்கு அப்படியே உள்ளது. இதனால் அவர் எளிதாகவும், அதோடு கடந்த முறையை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்வார் எனவும் பாஜகவின் உள்கட்சி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றி உறுதியாகி விட்டதாகவும், அதனால் அவர் பிற மாநிலங்களில் கவலையின்றி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு கட்சி வேட்பாளர்களை வெல்ல வைக்கலாம்.மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல இலக்க நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் பிரசாரம் என்பது முக்கியமானது. அப்படியான சூழலில் 2 முறை வெற்றி பெற்ற வாரணாசியே வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‛சேப்' தொகுதியாக இருக்கும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நினைத்து இருக்கலாம். இது 3வது காரணமாகும்.












Click it and Unblock the Notifications