"அயோத்தி ராமர் கோயிலுக்கு ஜன.22இல் மக்கள் வர வேண்டாம்.." பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்! என்ன காரணம்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் ஜன.22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அன்று ராமர் கோயிலுக்கு வர வேண்டாம் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தான் இந்துக்களின் புனித கடவுளான ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்கே தான் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்குப் பக்தர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
பிரதமர் மோடி: இதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 22ஆம் தேதி பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வர வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேக தினத்தன்று ஏன் வர வேண்டாம் எனச் சொல்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அயோத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இங்கே அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் போது அனைவரும் அயோத்திக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவராலும் ஒரே நேரத்தில் வர முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, ஒவ்வொருவரும் அவர்கள் வசதிக்கு ஏற்ப வரலாம்.
காத்திருக்கவும்: ராமரின் பக்தர்கள் தெய்வத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே 550 ஆண்டுகள் காத்திருந்தோம், தயவுசெய்து இன்னும் சில நாட்கள் காத்திருக்கவும்" என்று அவர் தெரிவித்தார். அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் பிரதமர் மோடி இந்த கருத்துகளைத் தெரிவித்தார்,
ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டன. கும்பாபிஷேகம் நடக்கும் நாளன்று அயோத்தி வர வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்திய பிரதமர் மோடி, ஜனவரி 22ஆம் தேதி தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அயோத்தி: மேலும், ஜனவரி 14 மற்றும் ஜனவரி 22 ஆம் தேதிகளில் இருந்து நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்கள் மற்றும் கோயில்களில் தூய்மை இயக்கங்களைத் தொடங்குமாறும் பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார். நேற்றைய தினம் ரூ. 15,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று அயோத்தியில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் அங்கே அளவு கடந்து செல்லக் கூடும் என்பதாலேயே பிரதமர் மோடி அன்றைய தினம் அங்கே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்குப் பதிலாக வீடுகளில் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications