‛எங்கயோ இடிக்குதே’.. மகளிர் இடஒதுக்கீட்டுக்கு கருத்து கூற மறுத்த ராகுல்! பரபரப்பு- பின்னணி இதுதானா?
டெல்லி: ஏறக்குறைய 27 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்க மறுத்ததோடு அவர் கொடுத்த ரியாக்சன் குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் இடஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என்று மாநிலங்கள் வாரியாக தனி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கடந்த 1996ல் பிரதமராக இருந்த தேவேகவுடா இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
அதன்பிறகு வாஜ்பாய், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த மசோதாவை நிறைவேற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் என்பது கைக்கூடவில்லை. இறுதியாக கடந்த 2008ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இம்மசோதாவை ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இருப்பினும் லோக்சபாவில் மசோதா அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா மற்றும் முதல் அலுவல் பணி இது என்பதை அந்த மசோதா பெற்றது. அதேபோல் மாநிலங்களவையில் நாளை மறுநாள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மசோதா காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது தற்போது காலாவதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பெரும்பாலான கட்சிகள் ஆதரிக்கின்றன. இதனால் மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, ‛‛மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறீர்களா'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதாவது ஆதரவு, எதிர்ப்பு என எந்த நிலைப்பாட்டையும் ராகுல் காந்தி கூறாத நிலையில் ‛‛சரியான நேரம் வரும் வரை நான் அதுபற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன்'' என்றார். ராகுல் காந்தியின் இந்த பதில் என்பது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி ஏன் சரியான நேரம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த மசோதா சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது வரும் 2029ல் தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. மாறாக வரும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த மசோதா என்பது நடைமுறைக்கு வராது என சொல்லப்படுகிறது. இதனால் தான் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் முன்கூட்டியே கருத்து எதையும் கூறாமல் பின்வாங்கி உள்ளார். மாறாக மத்திய அரசின் செயல்பாட்டை பொறுத்து இதுபற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications