ரஷ்யா அதிபர் புதின் இந்தியாவில் கால் வைத்தால் ‘கைது’? சர்வதேச நெருக்கடியில் மத்திய பாஜக அரசு?
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகை தந்தால் அவரை உக்ரைன் போர்க் குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டிய சர்வதேச நெருக்கடியை மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லி விழாக் கோலம் பூண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர்.

உலக தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் (ஜோ பைடன்), இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், சீனா அதிபர் ஜி ஜின்பிங், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதினும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மோடி- புதின் பேச்சு: இந்நிலையில் ரஷ்யா அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்த புதின், ரஷ்யாவின் பிரதிநிதியாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பார் என கூறினார்.
பயணங்கள் தொடர் ரத்து: பொதுவாக உக்ரைன் போருக்குப் பின்னர் வெளிநாட்டு பயணங்களை புதின் வெகுவாக குறைத்துவிட்டார் என்கின்றன சர்வதேச ஊடகங்கள். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாடு, தென்னாப்பிரிக்கா பிரிக்ஸ் மாநாடு ஆகியவற்றிலும் புதின் பங்கேற்கவில்லை. இரு மாநாடுகளிலுமே வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார்.
சர்வதேச நீதிமன்ற பிடிவாரண்ட்: புதின் இப்படி வெளிநாட்டு பயணங்க்ளை தவிர்ப்பது குறித்து எழுதியிருக்கும் ஊடகங்கள், உக்ரைன் விவகாரத்தில் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றமானது அண்மையில் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான யுத்தத்துக்குப் பின்னரே அந்நாடு சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் உறுப்பினராகவும் இணைந்தது. இதனால் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட்டை செயல்படுத்துவதில் சர்வதேச நீதிமன்றம் தீவிரமாக இருக்கிறது என்கின்றன.
கைது நெருக்கடி: ஜி 20 மாநாட்டுக்காக புதின் இந்தியா வந்தால், சர்வதேச நாடுகள் மூலமாக இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் நெருக்கடி தரக் கூடும்; புதின் மீதான பிடிவாரண்ட்டை செயல்படுத்த அவரை கைது செய்ய அழுத்தம் தரலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லைதான். ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் மூலமாக அழுத்தம் தரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாம். இத்தகைய ஒரு நெருக்கடியை தவிர்க்கவே ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகையை ரத்து செய்துவிட்டார் எனவும் அந்த ஊடகங்கள் எழுதி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications