தமிழகம், மேற்கு வங்கத்தில் SIR நடக்கும்.. ஆனால் பாஜக ஆளும் அசாமில் மட்டும் இல்லையே ஏன்?
டெல்லி: பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் சார் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சார் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மட்டும் சார் பணிகள் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துப் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கிடையே நாடு முழுக்க இந்த சார் நடவடிக்கையை எடுக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சார் பணிகள் நடக்கிறது. இது குறித்த அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டார். மொத்தம் 12 மாநிலங்களில் சார் நடவடிக்கை நடக்கிறது.

சார் நடவடிக்கை
அடுத்தாண்டு தொடக்கத்தில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரியில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு சார் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெறும் அசாமிற்கு சார் நடவடிக்கை அறிவிக்கப்படவில்லை. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியில் இருக்கும் சூழலில் அசாமில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதை வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. பாஜக ஆட்சியில் இருப்பதாலேயே அங்குச் சார் நடக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
காரணம் என்ன
இருப்பினும், சார் லிஸ்டில் அசாம் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்திருந்தார். இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அசாம் மாநிலத்தில் குடியுரிமை விதிமுறை நாட்டின் பிற பகுதியிலிருந்து வேறுபடுகிறது. எனவே, அசாம் மாநிலத்திற்குத் தனியாகச் சிறப்புத் திருத்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதற்குத் தனியாகச் சார் திருத்தத் தேதி அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
விதிகள் என்ன
வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அசாம் மாநிலத்திற்கு, குடியுரிமைச் சட்டம் பிரிவு 6A இன் கீழ் சில பிரத்தியேகக் குடியுரிமை விதிகள் உள்ளன. அதாவது ஜனவரி 1, 1966க்கு முன் வங்கதேசத்தில் இருந்து அசாமிற்கு வந்தவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். 1966- 1971 காலகட்டத்தில் வந்தவர்கள் பதிவு செயல்முறைக்குப் பிறகு குடியுரிமை பெறலாம். 1971ம் ஆண்டு மார்ச் 25க்குப் பிறகு அசாமிற்குள் நுழைந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகளை அங்குள்ள தீர்ப்பாயம் தான் எடுக்கும்.
இதனால் அசாமில் சார் பிராசஸ் சிக்கலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதே அசாமில் தான் 6 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்தது. அதில் 19 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் பெயர் இடம்பெறவில்லை. அரசு நடவடிக்கைகளைத் தவிர்க்க அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அப்போது அங்குப் பெரும் போராட்டங்கள் வெடித்ததால் அந்த நடவடிக்கை அப்படியே நிறுத்தப்பட்டது.
12 மாநிலங்களில் சார் நடவடிக்கை
இப்போது மொத்தம் 12 மாநிலங்களில் சார் பிராசஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் இன்றிரவு முடக்கப்படும் நிலையில், சரிபார்ப்பு நடவடிக்கை நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜனவரி 8 வரை மேல்முறையீடு செய்யலாம். அவை ஜனவரி 31 வரை விசாரிக்கப்படும்.. தொடர்ந்து பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications