தேசியளவில் காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி? வந்து விழுந்த கேள்வி.. பிரசாந்த் கிஷோர் நறுக் பதில்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி தேசியளவில் உருவெடுக்குமா என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி: லோக்சபா தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக என்டிஏ கூட்டணியில் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன.. குறிப்பாகக் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் நேர் எதிராகப் பயணித்த ஆம் ஆத்மியும் காங்கிரசும் ஒன்றாக இணைந்துள்ளன. இது தேசியளவில் அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மி குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வாய்ப்பே இல்லை: பல்வேறு மாநிலங்களில் மெல்ல வெற்றி பெற்று வரும் ஆம் ஆத்மி காங்கிரஸ் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் அவர்கள் டெல்லியில் எப்படி ஆட்சியைப் பிடித்தார்களோ அதேபோல மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், "அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.. ஆம் ஆத்மியில் என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய பலவீனம் இருக்கிறது. அதாவது அவர்களிடம் வலுவான கருத்தியல் இல்லை. அதேபோல ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு விரிவான அமைப்பும் அவர்கள் பின்னால் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
வாரிசு அரசியல்: காங்கிரஸ் தொடங்கி திமுக, சமாஜ்வாதி எனப் பல பிராந்திய கட்சிகளைக் கூட பாஜக குடும்ப கட்சி என்றே விமர்சித்து வருகிறது. இது குறித்த கேள்விக்கு, இதை பாஜக ஒரு குற்றச்சாட்டாகச் சொன்னாலும் கூட வாக்கைத் தீர்மானிக்கும் அளவுக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "சுதந்திரம் அடைந்த காலத்தில் தலைமுறை தலைமுறையாக அரசியலில் இருப்பதும் மிகப் பெரிய தலைவரின் வாரிசு அரசியலுக்கு வருவதும் பாசிடிவான பலனைத் தந்து இருக்கலாம். ஆனால், இப்போது அப்படிப்பட்ட காலம் இல்லை. தலைவர்களின் வாரிசுகள் தலைமை ஏற்பது சிக்கலையே தருகிறது. அவர்களால் பெரிய வெற்றியைப் பெற்றுத் தர முடிவதில்லை.
மக்கள் ஏற்கவில்லை.அது ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் அல்லது தேஜஸ்வி யாதவ் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தந்த கட்சி தொண்டர்கள் அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் மக்கள் அவர்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. சமாஜ்வாதியில் டாப் நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை அகிலேஷ் யாதவை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், மக்கள் அவரை முழுமையாக ஏற்கவில்லை. இதன் காரணமாகவே அவரால் பெரிய வெற்றியைப் பெற்றுத் தர முடியவில்லை.
பாஜக இப்போது தான் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதால் அவர்களுக்கு இந்த பிரச்சினை இதுவரை வரவில்லை. ஆனால் இப்போது அவர்களுமே முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்குப் பதவிகளை வழங்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் இது பாஜகவில் பிரச்சினையாக வெடிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications