தடுப்பூசி அனுமதி கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த உதவும்... உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

உலகின் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் விரைவில் தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்குத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று ஒப்புதல் அளித்தது.

உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதியளித்துள்ள இந்தியாவின் இந்த முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி அனுமதி என்பது இந்தப் பகுதியில் கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த உதவும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

பாதிப்பைக் குறைக்கலாம்
மேலும், அதிக ஆபத்தில் இருக்கும் மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகளில் முன்னுரிமை அளிப்பதன் மூலமும், மக்களின் ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் கொரோனா பாதிப்பு பெருவாரியாகக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு
ஆக்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் சோமணி கூறுகையில், "ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 70.42% ஆக உள்ளது. பாரத் பயோடெக்கின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. மேலும், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. பாதுகாப்பற்ற எந்த தடுப்பூசிக்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். இவை முற்றிலும் பாதுகாப்பானது. காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பக்க விளைவுகள் அனைத்து தடுப்பூசிகளாலும் ஏற்படும். அதற்கு கொரோனா தடுப்பூசிகளும் விதிவிலக்கு அல்ல" என்றார்.

கோவாக்சினும் கோவிஷீல்டும்
புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் வழங்கும். சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தைத் தயாரித்து வருகிறது. அதேபோல ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து சொந்தமாக கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தைக் தயாரித்துள்ளது.












Click it and Unblock the Notifications