உக்ரைன் போரால்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? என்ன நடக்கும்? மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மையை கண்காணித்து வருவதாகவும், இதில் முக்கிய முடிவுகளை தேவையான நேரத்தில் எடுக்க தயாராக இருப்பதாகவும் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டோம்.
ஐரோப்பிய நாடுகளும் விரைவில் இந்த முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.

இந்தியா பரிசீலனை
ரஷ்யாவின் இந்த தள்ளுபடியை பரிசீலனை செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 3 சதவிகிதம் வரை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. இப்போது போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 104 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் தேர்தல் முடிந்தும் இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

என்ன நடக்கும்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா அல்லது அப்படியே தொடருமா என்ற கேள்வி மக்கள் இடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் பற்றி இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பேட்டி அளித்தார். அதில், கச்சா எண்ணெய் விலை உயர்வை கண்காணித்து வருகிறோம். சர்வதேச அளவில் மார்க்கெட்டில் நடக்கும் மாற்றங்களை, போரால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம்.

தேவையான முடிவு
தேவையான நேரத்தில் இதில் முடிவுகளை எடுப்போம். இந்தியாவிற்கு எது உகந்தது, எது அவசியம் ஆனது. கச்சா எண்ணெய் துறையில் நிலவும் டென்ஷனை எப்படி போக்குவது என்பதை ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம். உக்ரைன் ரஷ்யா போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிடங்குகளில் இருந்த 5 மில்லியன் எரிபொருட்களை வெளியே மார்க்கெட்டில் விட்டு இருக்கிறோம்.

விரைவில் முடிவு
சர்வதேச மார்க்கெட்டை பொறுத்தே இந்தியாவின் எரிபொருள் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. ஏற்கனவே டீசல், பெட்ரோல் மீதான கலால் வரியை ரூபாய் 5 மற்றும் 10 குறைத்து இருக்கிறோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்தோம். சர்வதேச சந்தையை பொறுத்து இதன் விலையை நிர்ணயம் செய்வோம், என்று இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பேட்டி அளித்தார்.












Click it and Unblock the Notifications