நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை அறிவித்த மத்திய அரசு.. எகிறும் எதிர்பார்ப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3ம் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சற்று தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

19 நாட்களில் மொத்தம் 15 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும். 22 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். 19 நட்களில் மொத்தம் 15 அமர்வுகளாக அவை நடைபெறும். இந்தக்கூட்டத்தொடரில் அவை அலுவல்கள் தொடர்பாக விவாதம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளார்.
3 மசோதாக்கள்: குளிர் கால கூட்டத் தொடரில் மூன்று முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்களை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்களை ஆய்வு செய்த உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே, குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மூன்று மசோதாக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதாவும் நிலுவையில் உள்ளது.
5 மாநில தேர்தல் முடிவு: இந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளனர். இதை கேபினட் செயலாளர் அந்தஸ்துக்கு மாற்ற இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல், முன்னாள் தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக குளிர் கால கூட்டத்தொடர் முடிந்து விடுகிறது. நடப்பு ஆண்டின் கடைசி நடாளுமன்ற கூட்டத்தொடரும் இதுவேயாகும். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. மொத்தம் 5 நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இந்தக் கூட்டத்தில் நிறைவேறியது. இதேபோல் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு அறிவித்த அடுத்த நாளில் அதாவது மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால அது தொடர்பான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications