உங்க எல்லா சீட்டையும் முஸ்லிம் பெண்களுக்கு கொடுங்க.. உள் இடஒதுக்கீடு கேட்ட அகிலேசுக்கு அமித்ஷா தந்த பதில்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் கருத்து மோதல் நடந்தது. மகளிர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியதற்கு, வேண்டுமானால் உங்களின் அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் என்று அமித்ஷா கூறினார்.
3 நாளுக்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இதில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைவரும் ஆதரவு அளிக்கின்றன. ஆனால் லோக்சபா தொகுதி மறுவரை மசோதாவுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே தான் இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவை அறிமுகம் செய்தார். யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும்போதே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் லோக்சபா தொகுதி மறுவரையரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ ராசா உள்ளிட்டவர்கள் பேசினர். இந்த சமயத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ' மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமிய பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
அதனை கேட்டதும் மத்திய அமைச்சர் அமித்ஷா எழுந்து, ''மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது. வேண்டுமானால் சமாஜ்வாதி கட்சி தனது அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை'' என்றார்.
இதனால் டென்ஷனான அகிலேஷ் யாதவ், ''உங்களின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது.முஸ்லிம் பெண்கள் மக்கள் தொகையின் பாதிப் பகுதியாக இல்லையா?'' என்று கேள்வி எழுப்பினார். அமித்ஷா - அகிலேஷ் யாதவ் இடையே நடந்த இந்த விவாதம் லோக்சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகப் பதிவு செய்தார். இது தொடர்பாக அவர், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. நமது அரசியலமைப்பு அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்கவே தொகுதி மறுசீரமைப்பு செய்கிறோம் என்பது மத்திய அரசின் வாதமாக இருக்கிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும்போது சிறுபான்மை சமூக பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதே எதிர்க்கட்சிகள் வாதமாக இருக்கிறது. ஆனாலும், அதற்கு வாய்ப்பில்லை என்பதையே அமித் ஷா தனது பதில் மூலம் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications