இது சலுகையல்ல உரிமை.. பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி வார்னிங்.. என்ன பேசினார்?
டெல்லி: ''பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல, அது அவர்களின் உரிமை. இடஒதுக்கீட்டின் வாயிலாகப் பெண்களுக்கு நாடு ஏதோ ஒன்றைச் "சலுகையாக வழங்குகிறது" என்ற மாயைக்குள் சிக்கி கொள்ள கூடாது'' என்று பிரதமர் மோடி பேசினார். அதுமட்டுமின்றி இந்த சட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்த விஷயத்தில் யார் அரசியல் செய்ய விரும்பினாலும் அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? என்பதை யோசித்து கொள்ளுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு வார்னிங் செய்தார்.
3 நாளுக்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இதில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைவரும் ஆதரவு அளிக்கின்றன. ஆனால் லோக்சபா தொகுதி மறுவரை மசோதாவுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
3 மசோதாக்கள் தாக்கல்
இதற்கிடையே தான் இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவை அறிமுகம் செய்தார்.
அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
நாடாளுமன்ற வரலாற்றில் முக்கிய தருணம்
''மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முக்கிய தருணமாக அடையாளப்படுத்தப்படும். இந்தச் சட்டம் உண்மையில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராமல் காலம் தாழ்த்தியவர்களை கடந்த காலங்களிலேயே பெண்கள் தண்டித்து உள்ளனர். இந்த விஷயத்தில் யார் அரசியல் செய்ய விரும்பினாலும் அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? என்பதை யோசித்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு காலப்போக்கில் அது மேலும் வலுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலமாக நாட்டுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் பெண்கள் அதிகமாக ஈடுபட முடியும். மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வரும் இந்த தருணத்தை எம்பிக்கள் யாரும் தவறவிடக்கூடாது.
எந்த கட்சிக்கும் சாதகமானது இல்லை
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமானது இல்ல. இது ஆளுங்கட்சிக்கு மட்டுமோ அல்லது தனக்கு தனிப்பட்ட முறையிலோ சாதகமானஇ இல்லை. இந்த மசோதா திறம்பட செயல்படுத்தப்பட்டால் அதன் வெற்றி நம் நாட்டின் அனைத்து மக்களுக்குமானதாக இருக்கும். இறுதியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கே ஒரு பெருமையாக அமையும். இந்த சீர்திருத்தத்தை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாதனையாகக் கருதுவதை விட, ஒரு நாட்டின் தேசிய அளவிலான முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும்.
சலுகையல்ல உரிமை
பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல, அது அவர்களின் உரிமை. இடஒதுக்கீட்டின் வாயிலாகப் பெண்களுக்கு நாடு ஏதோ ஒன்றைச் "சலுகையாக வழங்குகிறது" என்ற மாயைக்குள் சிக்கி கொள்ள கூடாது. பல தசாப்தங்களாக இந்த வாய்ப்பு தாமதப்படுத்தப்பட்டு வந்தது. கடந்தகால தவறுகளை சரிசெய்வதன் மூலம் பாவமன்னிப்பு கேட்டு கொள்ளும் காலமாக இந்த தருணம் அமைந்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தின் முடிவெடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதன் வாயிலாக, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தருணம் அமைந்துள்ளது'' என்றார்.'' என்றார்.












Click it and Unblock the Notifications