மத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
டெல்லி: மத்திய அரசு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கினால், பற்றாக்குறையால் ஒருவரையும் உயிரிழக்க விட மாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. தலைநகரில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அவலங்களும் நடைபெற்றன.
டெல்லிக்கு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்றும், இருப்பினும் அதை மத்திய அரசு வழங்குவதில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் கடும் கண்டிப்பிற்குப் பிறகு, புதன்கிழமை டெல்லிக்கு 730 டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகருக்குத் தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரைகூட உயிரிழக்க விட மாட்டோம் என்று உறுதியளித்தார்.
தினசரி 700 டன் ஆக்சிஜன் கிடைத்தால் கூடுதலாக 9500 படுக்கைகளைச் சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் படுக்கைகளைக் குறைத்த மருத்துவமனைகள், படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications