பயப்பட வேண்டாம்.. யெஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு நிதியமைச்சர் அளித்த ஆறுதல்!
டெல்லி: யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும் அவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
Recommended Video
நிதி நிலைமை மோசமடைந்து வருவதால் யெஸ் வங்கியின் நிர்வாகத்தை 30 நாட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. அத்துடன் வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை அதன் கணக்கு வைத்தருப்போர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை விதித்துள்ளது.
வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதி நிலைமை படுமோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் யெஸ் வங்கி தள்ளாடி வருகிறது. மூலதன நிதியை திரட்ட பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.
49 சதவீத பங்குகள்
இந்த வங்கியை மீட்டெடுக்கும் வகையில் இதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கியையும், எல்ஐசியையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளத இந்த இரண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து 49 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வரலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் யெஸ் வங்கியின் பங்குகள் கொஞ்சம் பரவாயில்லை ரகமாக நேற்று 22 சதவீதம் உயர்ந்தது..
ஏப்ரல் 3ம் தேதி வரை
இந்நிலையில் யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.50000க்கு மேல் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சகம் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று யெஸ் வங்கியின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. பங்கு மதிப்பு ரூ.15க்கு வந்துள்ளது. அந்த வங்கி ஒட்டுமொத்தமாக 85சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ உறுதி
இதனால் அந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இதுபற்றி கூறுகையில், யெஸ் வங்கி குறித்த முடிவு தனிப்பட்ட நிறுவன மட்டத்தில் அல்லாமல் "பெரிய மட்டத்தில்" எடுக்கப்பட்டது, மேலும் இது நிதி அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க எந்த வகையிலும் தலையிட ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது" என்று உறுதியளித்தார்.
அச்சப்பட வேண்டாம்
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் முற்றிலுமாக சரி செய்து விரைவான தீர்வை தருவதாக உறுதியளித்துள்ளது, யெஸ் வங்கியில் பணம் போட்ட ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கும் அவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அவர்களின் பணம் பாதுகாப்பானது. நான் தொடர்ந்து ரிசர்வ் வங்கியுடன் தொடர்பு கொண்டுள்ளேன். அவை வைப்புத்தொகை, வங்கி மற்றும் பொருளாதாரத்தின் நலனுக்காக எடுக்கப்படுகின்றன. நாங்கள் அதன் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திவைத்துள்ளோம்" என்றார்.