ஓர் ஆண்டில் தேர்தல்.. உபி முதல்வர் பதவிக்கு வேட்டு? நிலைமை சமாளிக்க டெல்லி பறந்த யோகி.. அடுத்து என்ன
டெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் மாற்றப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்திக்கிறார்.
Recommended Video
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் உள்ளது. பெரிய மாநிலம் என்பதால் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தன.
இது எந்தளவுக்குச் சென்றது என்றால், ஒரு கட்டத்தில் அங்குள்ள கங்கை நதியில் கொரோனா சடலங்கள் மிதக்கத் தொடங்கின. நிலைமை அந்தளவு கட்டுக்கடங்காமல் சென்றது.
உத்தரப் பிரதேசம்
இதனால் உத்தரப் பிரதேச மக்கள் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் கோபத்தில் உள்ளதாகச் செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவைப் பொருத்தவரை உத்தரப் பிரதேசம் மிக முக்கியமான ஒரு மாநிலமாகும். கடந்த 2019 மக்களவை தேர்தலில் உபியில் பாஜக மட்டும் 62 இடங்களை கைப்பறிறயது.
முதல்வர் மீது அதிருப்தி
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜக பார்க்கிறது. இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து மக்களிடையே நிலவும் கருத்துக்கள் பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தல்களிலும்கூட பாஜக விரும்பிய முடிவுகளைப் பெற முடியவில்லை.
முதல்வர் மாற்றம்?
இதனால், உத்தரப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து யோகி ஆதித்யநாத் நீக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியானது. கடந்த வாரம், பாஜகவின் மூத்த தலைவர் பி.கே. சந்தோஷ் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று அங்கிருக்கும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். அதைத் தொடர்ந்து தனது அறிக்கையை பாஜக தலைமைக்கு அனுப்பினார். அதேபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபாலேலும் தனது ரீப்போர்ட்டை தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
களமிறக்கப்பட்ட தளபதி
இந்த அறிக்கைகள் அடிப்படையிலேயே முன்னாள் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் சர்மா உத்தரப் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். மோடிக்காக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப் பிரதேசம் போனவர்தான் அரவிந்த் குமார். உத்தரப் பிரதேச தேர்தலை தனது இமேஜ் விஷயமாக மோடியே கருதுகிறார். இதனால் விரைவில் அரவிந்த் குமார் சர்மாக்கு மிக முக்கிய பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் முக்கிய முகம்
மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஜிதின் பிரசாதாவும் நேற்று பாஜகவில் இணைந்தார். உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள் வாக்குகள் அதிகம் என்பதால், அதைக் குறிவைத்து ஜிதின் பிரசாதாவை பாஜக தனது பக்கம் இழுத்துள்ளது. இது முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
எது நடந்தாலும் சிக்கல்
உத்தரப் பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அல்லது குறைந்தபட்சம் மோடியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் துணை முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டில் எது நடந்தாலும் யோகிக்கு தான் சிக்கல், அதன் பிறகு தற்போது இருக்கும் இதே சுதந்திரத்துடன் அவரால் செயல்பட முடியாது.
டெல்லிக்கு பறந்த யோகி
தனது அதிகாரத்திற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலையில்தான் தற்போது டெல்லிக்குப் பறந்துள்ளார் யோகி ஆதித்யநாத்.. இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள யோகி ஆதித்யநாத், இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று சந்திக்கிறார். அதேபோல பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை நாளை சந்திக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் குழப்பம் தொடங்கிய பிறகு முக்கிய தலைவர்களை யோகி ஆதித்யநாத் சந்திப்பது இதுவே முதல்முறை. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.